டயர்களுக்கு யுஎஸ்ஸில் 35% கூடுதல் வரி: டென்ஷனில் சீனா
வாஷிங்டன்: சீனாவில் தயாராகி வரும் டயர்களுக்கு 35 சதவிகித கூடுதல் வரி விதிக்க ஆரம்பித்துள்ளது அமெரிக்கா. இதனால் இரு நாடுகளுக்கிடையே பெரும் மோதல் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் இந்தச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என சீனா அறிவித்துள்ளது.
சீனாவிலிருந்து அதிக அளவு டயர்களை அமெரிக்க நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. இதனால் அமெரிக்க டயர் உற்பத்தி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை மாற்ற முடிவு செய்த அதிபர் பாரக் ஒபாமா, சனிக்கிழமையன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் டயர்களுக்கு 35 சதவிகித கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவின் விற்பனை பிரதிநிதிகளின் (USTR) பரிந்துரையின் பேரில் இது நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு சீனாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவது என்றும் அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆனால், இதில் விதி மீறல் ஏதுமில்லை என்றும், சீனாவும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்ட உடன்பாட்டின்படி உள்ளூர் தொழில்களைக் காக்கும் நடவடிக்கையில் ஒன்றாகவே, இந்தக் கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் ஏற்கெனவே சீன மொபைல்கள், மருந்துகள், பொம்மைகள், பைக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications