பாக். போக விருப்பமில்லை-தாலிபான்களால் விரட்டப்பட்ட இந்து அகதிகள்
ஜோத்பூர்: பாகிஸ்தானில் இந்துக்கள் தாலிபான்களால் சித்ரவதை செய்யப்படுகின்றனர். இதனால் அங்கு செல்ல எங்களுக்கு விருப்பமில்லை அங்கிருந்து வெளியேறிய அகதிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளின் தொல்லை தாங்க முடியாமல் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் அகதிகளாக தார் எக்ஸ்பிரஸ் மூலம் ராஜஸ்தான் வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவரான ராம் லால் (இவரது சகோதரர் பாகிஸ்தானில் இருப்பதால் அவரது நலம் விரும்பி தனது பெயர் மாற்றி வெளியிட கோரிக்கை விடுத்துள்ளார்) என்ற 45 வயதுக்காரர் ஒருவர் கூறுகையில்,
பாகிஸ்தானில் இந்துக்கள் சித்ரவதை செய்யப்படுகின்றனர். பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். நான் 6 மாதத்துக்கு முன்பு எனது குடும்பத்தினர் 5 பேருடன் ராஜஸ்தான் வந்துவிட்டேன்.
தற்போது அங்கு நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. எனக்கு அங்கு போக விருப்பமில்லை. நான் ஒரு இந்து என்பதால் அங்கு நிறைய சிக்கலை எதிர்கொண்டேன்.
எங்களால் ஹோட்டல்களில் சென்று சாப்பிட முடியாது. அப்படியும் அதிசயமாக எதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் எங்களுக்கு தனியான பாத்திரத்தில் தான் கொடுப்பார்கள். அதை சாப்பிட்டு முடித்தவுடன் நாங்களே சுத்தம் செய்து அவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும்.
நான் சிந்து மாகாணத்தில் ஹைதராபாத் நகருக்கு அருகே இருக்கும் தில்ஷாக் பகுதியில் விவசாய வேலை பார்த்தேன். அங்கு இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரே சம்பளம் கிடைக்காது. இது குறித்து புகார் தெரிவிக்க கூட அங்கு வழியில்லை என்றார்.
இம்ரான் குமார் என்ற முஸ்லிம் பெயர் கொண்ட மற்றொரு இந்து அகதியின் கதையே வேறு. அவர் கூறுகையில்,
எனது அப்பா நேமி குமார். நானும் இந்து தான். நான் மதமாறவில்லை. ஆனால், பெயரை இம்ரான் குமார் என மாற்றி கொண்டேன். இதனால் தான் எனக்கு பள்ளியில் எளிதாக வாய்ப்பு கிடைத்தது என்றார்.












Click it and Unblock the Notifications