For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிழைப்பு தேடி வரும் தமிழர்களுக்கு கேரளாவில் அதிகரிக்கும் நெருக்கடி

By Staff
Google Oneindia Tamil News

Labours
- கே.எம்.இசக்கி ராஜன்

நெல்லை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பிழைப்பு தேடி செல்லும் தமிழர்களுக்கு தினம், தினம் நெருக்கடிகளும், சித்ரவதைகளும் அங்கு அதிகரித்து வருகின்றன.

மேலை நாடுகளை போல் முதலாளி வர்க்கத்தினர் அதிகரித்து நாளுக்கு நாள் வெளிநாட்டு பணம் வந்து குவியும் மாநிலமாகவும், ரப்பர், தேயிலை, மிளகு, கிராம்பு ஆகிய பணப்பயிர்களை மட்டுமே உற்பத்தி செய்து மீதி தேவைகளுக்கு முழுக்க முழுக்க தமிழகத்தையே நம்பியிருக்கும் மாநிலம் கேரளா.

கேரளாவில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்ட தமிழர்களும், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கூலி தொழிலாளிகளாக உள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு கேரளாவில் வேலை பார்த்து வருகின்றனர்.

இவ்வளவு பேரிலும் தமிழர்கள்தான் அதிகம். கொத்தனார், சித்தாள், ரப்பர் எஸ்டேட், தேயிலை எஸ்டேட், தச்சு வேலை, இரும்பு தொழில்புரிவோர், பலகார கடைகள், லாட்டரி சீட்டுகள், ஜவுளி நிறுவனங்கள் என அனைத்து தொழில் நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் தென்மாவட்டமான நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் அங்கு கைவரிசை காட்டியதை தொடர்ந்து அங்கு வயிற்றுப் பிழைப்புக்காக கொல்லம், சந்தனதோப்பு, திருவனந்தபுரம், ஆலப்புழை உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் தமிழர்களை அங்கு தங்கி பணிபுரிய விடாமல் போலீசார் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

தமிழத்திலிருந்து கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் எந்த ஊரில் இருந்து செல்கிறார்களோ அங்கு உள்ள காவல் நிலையம், வருவாய்துறை அலுவலர்களிடம் சான்று வாங்கி வரவேண்டும் என்றும் அப்படி சான்று இருந்தால் மட்டுமே கேரளாவில் தங்கியிருக்க அனுமதிக்க முடியும் என்று விரட்டியடித்து விடுகின்றனர்.

அத்தொழிலாளிகள் தமிழகம் வந்து சம்பந்தப்பட்ட அவர்கள் பகுதி காவல் நிலையத்தில் சான்று கேட்டால் இல்லை என்று கூறி விடுகின்றனர். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் குடும்பத்தோடு பட்டினியை நோக்கி பயணிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திமுகவின் மாநில பேச்சாளர் சக்திவேல் தமிழக முதல்வருக்கு தொலை நகல் ஓன்றை அனுப்பியுள்ளார்.

அதில், நெல்லை மாவட்ட தொழிலாளர்களுக்கு காவல் நிலையங்கள் மூலம் சான்று வழங்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடுமாறு கூறியுள்ளார்.

இது ஒருபுறம் என்றால் மறுபுறம் திருவனந்தபுரம், விழிஞம், பூவார், முள்ளுர் கடற்கரை பகுதியில் ஏராளமான தென்மாவட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவில் விடுதலை புலிகள் ஊடுருவி விட்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட பகுதியில் சில தினங்களாக முகாமிட்டு கூலி தொழில் புரியும் தமிழர்களை காவல் நிலையம் அழைத்து சென்று குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் காலை முதல் இரவு வரை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

காவல் துறையினரின் கொடுமைகளால் ஏராளமானோர் உயிருக்கும், உடமைக்கும் பயந்து அப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். தமிழர்கள் மீது கேரள காவல்துறை அடக்கு முறையை ஏவி விட்டுள்ளது. கேரள தமிழர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் நலம் காக்கும் திமுக அரசு, கேரள அரசுடன் பேசி இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பிழைப்பு தேடி கேரளாவை நம்பியுள்ள அப்பாவித் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X