அரசு மருத்துவமனையில் பிரசவம்: தமிழகம் முதலிடம்
கிருஷ்ணகிரி: அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடப்பது இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிகம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் விழால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். மேலும், அவர் 108 அவரசர கால ஆம்புலன்ஸ் சேவையையும் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில்,
கடந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் ஐந்து லட்சத்து 68 ஆயிரத்து 299 பிரசவங்கள் நடந்துள்ளன. இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிக பிரசவங்கள் நடப்பதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
உயிர் காக்கும் காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 1,849 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,406 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழக அரசு ரூ. 6 கோடியே 16 லட்சம் செலவு செய்துள்ளது.
தமிழகத்தில் பன்றிக் காய்சல் நோய் கட்டுப்படுத்தபட்டதால் இதுவரை இந்த நோய்க்கு மூன்று பேர் மட்டுமே பலியாகியுள்ளனர்.
108 அவரசர கால உதவி மருத்துவ ஊர்தி திட்டம் 25 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி 26 வது மாவட்டம். இதற்காக ரூ. 55 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆறு மாத காலத்துக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 108 அவரசர கால உதவி மருத்துவ ஊர்தி திட்டம் துவக்கப்படும் என்றார்.