தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் அரசு-ஜெ
சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை பிற போக்குவரத்து கழகங்களுக்கு வழங்குவதை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மக்களை இணைப்பதற்கு மட்டுமல்லாமல் அவர்களது முன்னேற்றத்திற்கு ஒரு அத்தியாவசியத் தேவையாக உள்ளவை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்' என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தப் பணியை செய்பவர்கள் போக்கு வரத்துத் தொழிலாளர்கள்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தாய்க்கழகம் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம். இந்தப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயங்கும் பேருந்துகளை பிற போக்குவரத்துக்கழகங்களுக்கு கொடுக்கும் முயற்சியில் கடந்த 2008ம் ஆண்டு திமுக அரசு ஈடுபட்டபோது, அதைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டதோடு, அந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன்.
இந்தச் சூழ்நிலையில், 25.8.2009 அன்று நடைபெற்ற போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து கும்பகோணம் கோட்டத்திற்கு 27 பேருந்துகளையும், மதுரை கோட்டத்திற்கு 38 பேருந்துகளையும்,
விழுப்புரம் கோட்டத்திற்கு 23 பேருந்துகளையும், கோயம் புத்தூர் கோட்டத்திற்கு 6 பேருந்துகளையும், சேலம் கோட்டத்திற்கு 6 பேருந்து களையும் முதற் கட்டமாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நிறைவு நாளான 15.9.2009 அன்று பிரித்துக் கொடுத்துள்ளார்கள்.
இதன் விளைவாக 719 போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் தமிழ் நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து பிற போக்குவரத்துக் கழகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த இடமாறுதல் காரணமாக தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு செலவு ஏற்படுவதோடு மட்டும் அல்லாமல், குடும்பத்தைவிட்டு பிரிந்து இருக்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.
அதே போல், வேறு போக்குவரத்துக் கழகங்களுக்கு மாறுதல் செய்யப்படும் தொழிலாளர்கள் அங்கு பணியில் இளையவராக கருதப்படுவதால், பதவி உயர்வு என்பது இல்லாமலேயே போய்விடும் என்று தொழிலாளர்கள் ஐயப்படுகிறார்கள். மேலும், ஓய்வுபெறும் நிலையில் இருக்கும் தொழிலாளர்கள் தங்களுடைய ஓய்வுகாலப் பயன்களை பெற முடியாத சூழ்நிலை உருவாகும்.
ஏற்கனவே, கிட்டத்தட்ட 115 கோடி ரூபாய்க்கு மேலான ஓய்வு காலப்பயன்களை தொழிலாளர்களுக்குத் தராமல் அரசு விரைவுப்போக்கு வரத்துக்கழகம் காலதாமதம் செய்து கொண்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், வேறு போக்குவரத்துக் கழகங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைப்பதில் கடும் காலதாமதம் ஏற்படும் என்று தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
ஏனெனில், பணிமாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்களை தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் பிற போக்குவரத்துக்கழகங்களுக்கு கொடுத்தால் தான் அப்போக்குவரத்துக் கழகங்கள் காலதாமத மின்றி ஓய்வூதியப் பயன்களை அளிக்கும்.
ஏற்கனவே, 115 கோடி ரூபாய்க்கு மேல் ஓய்வூதியப் பயன்களை தொழிலாளர்களுக்குத் தராமல் காலம் கடத்தி வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், பணி மாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்களை அளிக்க முன்வருமா என்பது சந்தேகம் தான்!.
திமுக அரசின் இந்தச் செயல் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தை அழிப்பதோடு மட்டும் அல்லாமல், இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகவும் உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளையும், வழித்தடங்களையும் பிற போக்குவரத்துக் கழகங்களுக்கு அளித்திருக்கும் அரசின் தொழிலாளர் விரோத செயல்பாட்டைக் கண்டித்தும், இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், 18ம் தேதி பல்லவன் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்கு வரத்துக்கழக அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.