ஆயிரம் ரூபாய் நோட்டுகள்-கமிஷ்னர் எச்சரிக்கை
சென்னை: ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டு புழங்குவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.
திருட்டுப் போய் மீட்கப்பட்ட நகைகள் மற்றும் பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அண்மையில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட ஜார்க்கண்ட் கும்பல் பிடிபட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில போலீசாரோடு இணைந்து விசாரணை நடத்த உள்ளோம்.
இந்த கும்பலின் பின்னணில் உள்ள முக்கிய புள்ளி குறித்த விவரங்களை ஜார்க்கண்ட் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
பொதுமக்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கள்ள நோட்டு வழக்குகள் அனைத்தும் விரிவாக விசாரணை நடத்த ஏதுவாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும்.
சென்னையில் சட்டத்துக்கு புறம்பாக நடந்து வரும் வீடியோ சூதாட்டத்தை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீஸ் வேடம் மற்றும் சிபிஐ அதிகாரிகள் போல நடித்து மோசடி செய்வது அதிகரித்துள்ளது. இத்தகைய நபர்களிடம் பொதுமக்கள் ஏமாந்து விட கூடாது. அத்தகைய நிலை ஏற்பட்டால் உடனே அருகே உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது போலீஸ் நிலையங்களுக்கோ சென்று விட வேண்டும்.
ஒயிட் காலர் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருக்கின்றனர்.
சௌகார்பேட்டை போன்ற பகுதிகளில் தங்க நகை திருட்டு அதிகமாக நடப்பதாக புகார் வந்ததால் அங்கு பணியாற்றும் புரோக்கர்களின் புகைப்படங்களை எடுத்து வைக்குமாறு கடைக்காரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து நகை-பணத்தை திருடிச்செல்லும் சம்பவம் அதிகரித்து வந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இதில், 25 கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 70 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
அண்ணாநகர் பகுதியில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆங்கிலோ இந்திய வாலிபர்கள் கீத் பெர்லின், ஸ்டீபன் ரோஜஸ், டி சில்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 31 பவுன் நகை கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications