ஈழம் மலர அண்ணாவின் கல்லறையில் சபதம்-வைகோ
திருச்சியில் நடந்த மதிமுக மண்டல மாநாடு, அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் வைகோ பேசுகையில்,
தமிழகத்தில் சூழ்ந்துகொண்டிருக்கும் துயரங்களில் இருந்து நம்மை காக்கும் ஒரே தலைவர் அண்ணா. பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கும் தமிழ் சமுதாயத்தை தட்டி எழுப்பத் தான் இந்த மாநாடு.
தமிழகத்தின் உரிமைகள் எல்லாம் பறிபோய் கொண்டிருக்கின்றன. அன்று ஈழத்தில் 25 தமிழர்கள் இறந்ததற்கு பதறிய போனார் அண்ணா ஆனால் இன்று நாதியற்ற நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். மிருகத்தைவிட கொடுமையான முறையில் கொடுமைப்படுத்தி கொல்லப்படுகின்றனர்.
உலகுக்கு முதன் முதலில் ஆடை அணிய வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தியவன் தமிழன். ஆனால் இன்று ஈழத்தில் ஆடையற்ற நிலையில் கை, கால்கள் எல்லாம் கட்டி கொடுமைப்படுத்தப்பட்டு தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.
ஆனால் இதுபற்றி முதல்வரிடம் கேட்டால் அது எல்லாம் பழைய படங்கள், இது குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஈழத்தமிழர்கள் பிரச்சனை முடிந்து விடவில்லை.
தமிழகர்களிடம் இலங்கையில் நடக்கும் அவவலங்களை எல்லாம் எடுத்து கூறும் குறும்படங்களை கொண்டு செல்ல வேண்டும். உலகெங்கும் இருக்கிற தமிழ் சகோதர, சகோதரிகள் சேர்ந்து நாம் இருக்கும் சமுதாயத்தை புதிய தேசமாக மலரச் செய்ய வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் வரை, என் நாவில் சக்தி இருக்கிற வரை நான் பேசிக்கொண்டே இருப்பேன். தனி ஈழம் மலர அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.
இலங்கையில்தான் தான் எல்லாம் முடிந்து விட்டதே வைகோ ஏன் இங்கு புலம்புகிறார் என்று சிலர் கேட்கலாம். அவர்கள் கூறுவது போல, எல்லாம் அழிக்கப்பட்டு விடவில்லை. இனிதான் பிரச்சனையே இருக்கிறது. பிரபாகரன் என்ற ஒரு வார்த்தை போதும். ஈழம் மலர அண்ணாவின் கல்லறையில் சபதம் ஏற்போம்.
அண்ணாவுக்கு விழா எடுக்கும் உரிமை கொண்ட ஒரே இயக்கம் மதிமுகதான்.
தமிழகத்தில் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம் செலுத்தும் கருணாநிதி, அண்ணாவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா எடுக்காதது ஏன்?. யாருக்கோ அரசு விடுமுறை அறிவித்தீர்களே அண்ணா நூற்றாண்டு விழாவிற்கு அரசு விடுமுறை விடவில்லையே ஏன்?.
நீங்கள் நினைத்திருந்தால் உலகத் தலைவர்களை அழைத்து வந்து விழா எடுத்திருக்கலாம். ஆனால், ஏன் நடத்தவில்லை.
அண்ணா காட்டிய வழியில் நாங்கள் தான் இயக்கத்தை நடத்தி வருகிறோம். அப்படி உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை அழிக்க நீங்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் எத்தனை. அஸ்திவாரம் எத்தனை.. இது நெருப்பின் மடியில் பிறந்த இயக்கம் இதை யாராலும் அழிக்க முடியாது என்றார் வைகோ.