பெங்களூர் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட குழந்தை
பெங்களூர்: பெங்களூரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து அங்குள்ள குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி நின்று வருகிறது.
திருவண்ணாமலையை சேர்ந்த வரதராஜ், பெங்களூர் கோடிசிக்கனஹள்ளி பகுதியில் ஆர்.ஆர். குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த குடியிருப்பின் அருகே உள்ள காலி நிலத்தில் குடிசை அமைத்து தனது மனைவி லட்சுமி, குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இத் தம்பதியின் ஒன்றரை வயது மகன் விஜய்.
நேற்று காலை 7 மணியளவில் விஜய் வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்தபோது சாக்கடையில் தவறி விழுந்தான்.
இந்த சாக்கடையின் அருகே தான் மாபெரும் பி.டி.எம். ஏரி உள்ளது. சாக்கடை கால்வாயில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் விஜயை வெள்ளம் இழுத்துச் சென்றது.
இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தரப்பட்டு கால்வாயில் விஜயை தேடும் பணி நடந்தது. ஆனால், இன்று காலை வரை உடல் கிடைக்கவில்லை.
இந்தக் கால்வாயைச் சுற்றி சுவர் கிடையாது, ஏரியைச் சுற்றிலும் தடு்ப்பும் கிடையாது.
பெங்களூரில் சாலைகளி்ல் பாதாள சாக்கடை மூடிகள் திறந்து கிடக்கும். மழை நேரத்தில் அது திறந்திருப்பது தெரியாமல் அதில் விழுந்து பலியானவர்கள் நூற்றுக்கணக்கில். ஆனாலும் அதைப்பற்றியெல்லாம் பெங்களூர் மாநகராட்சி கவலைப்படுவதும் இல்லை.
கர்நாடக ஊராட்சி அமைப்பு நாட்டிலேயே மிக மிக ஊழல் மலிந்த ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.
கடந்த 3 மாதத்திற்கு முன் இதேபோல பலத்த மழையின்போது பெங்களூர் லிங்கராஜபுரத்தை சேர்ந்த சிறுவன் அபிஷேக் (6) நீரில் அடித்து செல்லப்பட்டான். அவனது உடலை தீயணைப்பு படை வீரர்கள், ராணுவ வீரர்கள் ஒரு மாதமாக கால்வாய்களிலும் அது போய் சேரும் அல்சூர் ஏரியிலும் தேடினார்கள். ஆனால் சிறுவனின் உடல் கிடைக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.