பதவியை துறந்து எம்எல்ஏ ஆக அழகிரி திட்டமா?

சென்னை மாநகர காவல்துறையின் கூடுதல் ஆணையராக இருந்தவர் ஏ.கே.விஸ்வநாதன். இவர் கூடுதல் ஆணையராக இருந்தபோதுதான் உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்தது.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இவரும் இணை ஆணையர் பாலசுப்ரமணியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந் நிலையில் விஸ்வநாதனை தனது சிறப்பு அதிகாரியாக நியமித்து டெல்லிக்கு வரவழைத்தார் அழகிரி. ஆனால் இந்த நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் கமிட்டியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆனாலும் இதை மீறி அழகிரி விஸ்வநாதனுக்கு பணி அளித்திருந்தார்.
இந் நிலையில் தற்போது விஸ்வநாதனை நீக்குமாறு பிரதமர் அலுவலகம் அழகிரிக்கு உத்தரவிட்டுள்ளதாம். விஸ்வநாதன் இணை செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர். அவரை சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்க முடியாது என்று டெக்னிகல் விஷயத்தை சுட்டிக் காட்டி பிரதமர் அலுவலகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாம்.
ஏற்கனவே அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச முடியும். தாய் மொழியில் பேச முடியாது என்று லோக்சபா செயலகம் தெரிவித்துள்ளதால் கடும் அப்செட்டில் உள்ள அழகிரிக்கு இந்த பிரதமர் அலுவலக உத்தரவும் எரிச்சலைத் தந்துள்ளதாம்.
இப்படி டெல்லியில தனக்கு எதிரான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருப்பதால், அதிருப்தி அடைந்துள்ள அழகிரி, பேசாமல் மாநில அரசியலுக்கேத் திரும்பி விடலாமா என்ற யோசனையில் இருப்பதாகக் கூட கூறப்படுகிறது.
அவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு விரைவில் நடைபெறவுள்ள திருச்செந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடக் கூடும் எனவும் பேசப்படுகிறது.
ஆனால், இதை திமுக வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுக்கின்றன. அழகிரிக்கு போராடித்தான் பழக்கம். அவர் எதையும் பாதியில் வந்துவிடும் நபர் அல்ல. டெல்லியில் அவருக்கு எதிராக காய் நகர்த்துபவர்களுக்க அவர் உரிய சமயத்தில் 'திருப்பித் தருவார்' என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications