விடுதலைப் புலியாக செயல்படும் சீமான் - நடவடிக்கைக்கு காங். கோரிக்கை
சென்னை: இயக்குநர் சீமான் விடுதலைப் புலியாகவே செயல்பட்டு வருகிறார். அவரது பேட்டி இதை உறுதிப்படுத்துகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த தென் சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சபீர் அலி, நேற்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில்,
இயக்குநர் சீமான் வாரப்பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை சந்தித்ததாகவும், விடுதலைப்புலிகளுடைய கொள்கைகளை சிந்திக்க வேண்டும் என்றும், அதை ஆக்க சக்தியாக மாற்றும் வேலையை செய்யவேண்டும் என்றும் பிரபாகரன் எனக்கு கட்டளையிட்டு அனுப்பினார் என்றும் டைரக்டர் சீமான் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
சீமானின் இந்த பேட்டி இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளது. அவர் தமிழகத்தில் விடுதலைப்புலி போல் செயல்பட்டு வருவதும், அவரது இந்த பேட்டி உறுதிப்பட வைத்துள்ளது. சீமானின் பேட்டி இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது கியூ பிரிவு போலீஸார் தற்போது ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் இறுதியில், சீமான் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.