புகார் கொடுத்த நபருக்கு அடி-உதை: இன்ஸ்பெக்டருக்கு சம்மன்
மதுரை: காரைக்குடியில், ஒரு வழக்கு சம்பந்தமாக புகார் தந்த நபரையே காவல் நிலையத்தில் அடைத்து வைத்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் என்பவரை நேரில் ஆஜராகும்படி, மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சிவில் சப்ளை குடோனை சேர்ந்தவர் மாரிமுத்து. பில் கலெக்டர். இவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது
நான், வேலாயூரணியை சேர்ந்த பாலு என்பவரிடம் 17 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அதற்கு, வங்கி செக், புராமிசரி நோட் எழுதி கொடுத்தேன்.
கடனுக்காக, 10 சதவீத வட்டி செலுத்தினேன். கடனை முழுமையாக செலுத்திய பிறகும், வங்கி செக், புராமிசரி நோட்டுகளை தர பாலு மறுக்கிறார். கூடுதல் வட்டி கேட்டும், எனது வீட்டை அவருக்கு விற்கும்படியும் மிரட்டி வருகிறார்.
கூடுதல் வட்டி கொடுக்காவிட்டால், வேறு ஒருவர் மூலம், கோர்ட்டில் என் மீது செக் மோசடி வழக்கு பதிவு செய்ய போவதாகவும் பாலு மிரட்டுகிறார்.
இது குறித்து, தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் கிளை உத்தரவிட்டும், என் புகாரை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரிக்கவில்லை.
இதன் பிறகு, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். என் புகார் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர், புகாரை வாபஸ் பெறும்படி என்னை மிரட்டி வருகிறார். விசாரணைக்காக சென்ற என்னையும், சாட்சிகள் செந்தூர்பாண்டி, பாண்டியையும் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் சிறை வைத்தார்.
அவர் என் புகாரை தொடர்ந்து விசாரித்தால், உண்மை வெளிவராது. எனவே, எனது புகாரை, வேறு புலனாய்வு பிரிவினர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை, செப்டம்பர் 30 ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications