ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்
நெல்லை: சங்கரன்கோவில் அருகே அனுமதியில்லாமல் பதுக்கிய 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீபாவளி பண்டிகையின் போது வெடி விபத்துகளை தவிர்க்க முறைப்படி அனுமதி பெற்ற கடைகளில் மட்டுமே பட்டாசு விற்க வேண்டும் என்றும், குடோனில் சேமித்து வைக்க தனியாக அனுமதி பெற வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆனால் இதை மீறி எவ்வித அனுமதியும் இல்லாமல் பல பகுதிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்நது நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன் அனுமதி இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நெல்லை மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் மேற்பார்வையில் சங்கரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் திருமலைக்குமார், திருவேங்கடம் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது கஸ்தூரி ரெங்கபுரம் கிராம நிர்வாக அதிகாரி இசக்கிமுத்து, அந்த பகுதியில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையில் ஏராளமான பட்டாசுகளை அனுமதியில்லாமல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் கஸ்தூரி ரங்க புரத்திலுள்ள ஒரு பழைய தீப்பெட்டி ஆலை குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மூட்டை மூட்டையாக விதவிதமான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ராக்கெட் வெடிகள், அலங்கார மத்தாப்புகள், வேறு வகையான வெடிகள் என்று ஏராளமாக இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த பட்டாசுகளை சிவகாசியை சேர்ந்த கெண்டல்சாமி, அவரது மகன் புருஷோத்தமன், விருதுநகரை சேர்ந்த சுப்புராஜ் ஆகிய 3 பேரும் பதுக்கி வைத்திரு்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடந்தையாக இருந்த குடோன் உரிமையாளர் நம்மாழ்வார், அருள்மணி, ஊழியர்கள் சேவு பாண்டியன், மாரிச்சாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் புருஷோத்தமன், நம்மாழ்வார் ஆகியோரை தவிர மற்ற 5 பேரையும் கைது செய்தனர்.