ஈழத் தமிழர் - மீனவர் தாக்குதல்: பிரதமரை சந்திக்கும் திமுக, காங். எம்.பிக்கள்
மதுரை: ஈழத் தமிழர் அவலம் மற்றும் தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைப் படையினர் தாக்கி வருவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் முறையிடப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
மதுரையில் 15 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார் தங்கபாலு.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையில் முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களுக்கு விரைவில் மறு வாழ்வு வழங்குவது தொடர்பாகவும், தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்கி வருவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரதமரை நேரில் சந்தித்து திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் வலியுறுத்தவுள்ளனர்.
வருகிற 22ம் தேதி இதற்காக அனைவரும் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான சர்வே மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்றார் தங்கபாலு.