அண்ணாவின் அடையாளம் கருணாநிதி - அன்பழகன்

நேற்று திருவள்ளூர் நகரமன்றத்தில் அறிஞர் அண்ணாவின் சிலையை திறந்து வைத்து அவர் பேசுகையில்,
அண்ணாவுக்குள் மனிதநேயம் மலிந்து இருந்தது. மற்றவர்களை மதிக்கும் மேன்மை மிகுந்திருந்தது. மற்றவர் கண்ணீரை துடைக்கும் குணம் நிறைந்திருந்தது. அவர் ஒரு சகாப்தம் என்பதற்கு மாற்று கருத்தே கிடையாது.
தமிழர்களுக்கு செயலாற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து அண்ணா புதிய பாதையை அமைத்தார். தற்போது அந்த பாதையில் தமிழக முதல்வர் கருணாநிதி பயணம் செய்கிறார்.
முகவரி தெரியாத ஏழை மக்கள் நாடெங்கும் உள்ளனர். அவர்களுக்கு பாடுபடுவதை தன்னுடைய உயிர்மூச்சாக திமுக அரசு கொண்டுள்ளது. அதற்கான சமூக மாற்றத்தை நமது முதல்வர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மனிதனுக்கு செய்யும் தொண்டு தான் இறைவனுக்கு செய்யும் தொண்டு என அவர் கருதினார். அதனால் 1969ல் எனது லட்சியம் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவது என்றார்.
அதை முதல்வர் இன்று செயல்படுத்தி வருகிறார். அதன் மூலம் நமக்கு அண்ணா அடையாளமாக இருந்து வருகிறார்.
பெருந்தன்மையானவர்...
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் 1949 செப்டம்பர் 17ம் தேதி பெரியாரின் பிறந்தநாள் அன்று திமுக துவக்கப்பட்டது.
அப்போது அண்ணா, திமுகவிற்கு தலைவர் கிடையாது. அந்த பதவி பெரியாருக்காக காத்திருக்கின்றது என்று பெருந்தன்மையோடு கூறினார்.
ஜனநாயகத்திற்காக தேர்தலில் ஓட்டுக்களை சிதற விடக்கூடாது என்பதற்காக ராஜாஜி, காயிதேமில்லத், ஜீவா, மபொசி ஆகியோரை இணைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அந்த தேர்தலில் காமராஜர் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதற்காக அண்ணா மிகவும் வேதனைப்பட்டார். அவர் வெற்றிபெற்று சட்டசபைக்கு வந்திருக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார். அரசியலில் எதிரிகளையும் மதிக்கத் தெரிந்தவர் அண்ணா என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications