குழந்தையை தாக்கி, குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியை
சென்னை: சென்னையில் பள்ளி மாணவி ஒருவரை தலையில் பலமாக தாக்கிய ஆசிரியை ஒருவர், அந்த மாணவியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை சாஸ்திரி நகரில் வசிப்பவர் பாஸ்கரன் (35). இவரது மனைவி சங்கீதா. இவர்களது 4 வயது மகள் ஸ்ரீதேவி, நேதாஜி நகரில் உள்ள விவேகானந்தர் வித்யாலயா பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் தேர்வு சரியாக எழுதவில்லை என கூறி சிவசங்கரி என்ற ஆசிரியை அந்த சிறுமி தேர்வு எழுத வைத்திருந்த அட்டையால் தலையில் அடித்துள்ளார். அதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குழந்தை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அப்போது அங்கு வந்த பள்ளி நிர்வாகத்தினர் சிறுமியை தனியார் மருத்துவமனையில் சேர்க்குமாறும், தாங்கள் பண உதவி செய்வதாகவும் கூறியுள்ளனர்.
இந்த தகவலை கேள்விப்பட்ட போலீசார் அந்த ஆசிரியை மீது 323 பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த குழந்தையின் தந்தை, பள்ளி நிர்வாகம் தங்களுக்கு பணம் வாக்குறுதி ஏமாற்றிவிட்டதாக கூறி மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை பார்த்துள்ளார்.
மேலும், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் தங்களை உடனே மருத்துவமனையில் இருந்து வெளியேறும்படி கூறி மிரட்டி வருவதாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
உன் மீது வழக்கு போடுவோம். குடும்பத்தை அழித்து விடுவோம் என மிரட்டினர். சில ரவுடிகள் ஆட்டோவில் வந்தும் சத்தம் போட்டு சென்றனர். வெளியில் வா உன்னை தீர்த்து கைட்டிவிடுவோம் என்றனர். இதனால் எனது குழந்தை மற்றும் குடும்பத்தினரி்ன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.
பணத்துக்காக மிரட்டுகிறார்-போலீஸ்...
ஆனால், வட சென்னை இணை போலீஸ் கமிஷனர் சேஷசாயி இதை மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,
சிறுமி ஸ்ரீதேவியின் தந்தை சிகிச்சை செலவுக்காக ஆசிரியையிடம் ரூ.10 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால், அது போதாது என மேலும் ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார்.
குழந்தையை ஆசிரியை தாக்கியதாக அவர் இதுவரை போலீஸில் புகார் கொடுக்கவில்லை. போலீஸார் தாமாக முன் வந்து புகார் பெற்றுள்ளனர். இது குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications