குழந்தையை சாலையில் போட்டு போராட்டம்-100 பேர் கைது!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய தாய் மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த தேமுதிகவினர் உட்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் பாளப்பள்ளம் நடுபிடாகை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கோபிகா. திருமணம் முடிந்த சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் கோபிகா தன்னை மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி அவரது வீட்டு முன் கைக்குழந்தையுடன் 14 நாட்களாக சத்யாகிரக போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கோபிகாவுக்கு ஆதரவாக தேமுதிகவினரும் களமிறங்கினர். அவர்கள் கோபிகாவை கணவர் வீ்ட்டுக்குள் கொண்டு விடும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து பாளப்பள்ளம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
நேற்று மாலை குழந்தை மற்றும் பெற்றோருடன் கோபிகா பாலப்பள்ளம் சந்திப்பு பகுதிக்கு வந்தார். தேமுதிகவினரும் அங்கு திரண்டிருந்தனர். கோபிகாவிடம் போராட்டத்தை வாபஸ் பெற்று விட்டு செல்லுமாறு போலீசார் கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த கோபிகா தனது குழந்தையை கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் படுக்க வைத்தார். குழந்தை சூடு தாங்காமல் அலறவே பெண் போலீசார் ஓடி வந்து குழந்தையை தூக்கி கோபிகாவிடம் ஓப்படைத்தனர்.
பின்னர் ஒரு துணியை சாலையில் விரித்து அதன் மீது குழந்தையை படுக்க வைத்த கோபிகா தனது பெற்றோருடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக கைக்குழந்தையுடன் கோபிகா மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது அங்கிருந்த தேமுதிகவினர் கோபிகாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கூறி மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அரசு மூன்று பஸ்களை சிறைபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் ஜெகநாதன், கிள்ளியூர் ஓன்றிய செயலாளர் யூஜின், மாவட்ட துணை செயலாளர் வார்கீஸ் உள்பட 100 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications