லஞ்சம்-உணவுத்துறை அதிகாரிகள் சிபிஐ வழக்கு
சென்னை: சென்னையில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் இந்திய உணவு கழகத்தை சேர்ந்த 8 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தின் போது இந்திய உணவு கழகத்தை சேர்ந்த மேலாளர்கள் சிலர் பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளருக்கு லஞ்சம் கொடுப்பதாக சிபிஐக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் கடந்த 18ம் தேதி நடந்த மாதாந்திர கூட்டத்தின் போது அதிரடி சோதனை நடத்தினர். சிபிஐ அதிகாரிகள் வருவதை பார்த்த பொது மேலாளர் ஜெயக்குமார் (56) தன்னிடம் இருந்த ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்தை தனது உதவியாளர்கள் மூலம் மறைக்க பார்த்தார்.
ஆனால், சிபிஐ போலீசார் அவரை பிடித்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் துணை பொது மேலாளர் துரைராஜின் இருப்பிடத்தில் அங்காங்கே ஒழித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 49 ஆயிரத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து சிபிஐ போலீஸார் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள இவர்கள் இருவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். அப்போது பல கோடி மதிப்பிலான சொத்து விவரங்கள் சிக்கியுள்ளது.
பின்னர் சிபிஐ போலீஸார் லஞ்சப் பணம் கொடுத்த மேலாளர்கள் வெள்ளிமலையான்(கோயம்புத்தூர்), ஜெகன்நாதன் (தூத்துக்குடி), சௌந்திரம்(வேலூர்), பன்னீர்செல்வம்(தஞ்சாவூர்), சந்திர மோகன் தாஸ்(கடலூர்) மற்றும் குமார் (சென்னை) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் 6 பேர் மீதும் பதவியை துஷ்பிரோயகம் செய்தது(பிரிவு 13, 1 டி ), லஞ்சம் கொடுத்தது, கிரிமினல் சதி செய்தது (பிரிவு 120 பி) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் பொது மேலாளர் ஜெயக்குமார் மற்றும் துணை பொது மேலாளர் துரைராஜ் ஆகியோரை கைது செய்ய முடிவு செய்தனர். ஆனால், அவர்கள் இருவரது உடல்நலன் மோசமாக இருப்பதாக டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications