கருணாநிதியிடம் புதுவை கண்ணன் ஆசி
சென்னை: புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் கண்ணன், முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து ஆசி பெற்றார்.
புதுச்சேரியில் இருந்து தேர்ந்து எடுக்கப்படும் ராஜ்யசபா எம்.பி.க்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளராக கண்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 3வது முறையாக காங்கிரஸில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோருடன் கண்ணன் இன்று சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றார்.
புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர் ஜானகிராமன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் நாஜிம், எம்.எல்.ஏ.க்கள் வி.எம்.சி.சிவக்குமார், எஸ்.பி.சிவக்குமார், ஆர்.சிவா, ராஜாராமன் ஆகியோர் உடன் வந்தனர்.
பின்னர் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். மேல்- சபை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கண்ணன் வெற்றி பெற அவர் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல திட்டங்களை புதுச்சேரியிலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் சிறப்பாக நிறைவேற்றி வருகிறோம்.
மூத்த தலைவரான கருணாநிதி தலைமையில் அமைந்துள்ள தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது என்றார் நாராயணசாமி.












Click it and Unblock the Notifications