நளினிக்கு ஆதரவாக 13 கைதிகள் உண்ணாவிரதம்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுதலை செய்யக் கோரி அவரது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து புழல் மத்திய சிறையில் 13 கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
18 வருடங்களாக சிறையில் அடைபட்டுள்ள தன்னை விடுதலை செய்யக்கோரி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நளினி போராடி வருகிறார். சிறையில் இருந்தபடியே பல்வேறு மனுக்களை கொடுத்துள்ளார். வழக்கும் தொடர்ந்தார்.
இந்த நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில், புழல் சிறையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள அல்- உம்மா அமைப்பைச் சேர்ந்த குனங்குடி அனிபா, அலி அப்துல்லா, முஷாரப் அலி, ஏர்வாடி காசிம், ஆருண் இஸ்மாயில், அப்துல் ரகீம், ஷாஜி முகமது ஆகியோர் மற்றும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான புருஷோத்தமன், சகாயம் மற்றும் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, அய்யப்பன், ராஜா, மைனர் குரோஸ் ஆகிய 13 கைதிகள், நளினிக்கு ஆதரவு தெரிவித்து அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
தங்களையும், 18 வருடங்களாக வாடி வரும் நளினியையும் விடுதலை செய்யக் கோரி இவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
கருணாநிதிக்கு நளினி கடிதம்:
இந் நிலையில் அண்ணா நூற்றாண்டையொட்டி தன்னை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நளினி, முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நான் கடந்த 18 ஆண்டு மற்றும் 3 மாதங்களாக தமிழ்நாடு சிறைகளில் இருக்கிறேன். எனது கணவர் வெ.ஸ்ரீகரன் வேலூர் மத்திய சிறையில் மரண தண்டனை சிறைவாசியாக இருக்கிறார்.
தங்கள் தலைமையிலான தமிழக அரசு 7 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் பூர்த்தி செய்த நூற்றுக்கணக்கான ஆயுள் சிறைவாசிகளை ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந் தேதி விடுதலை செய்து வருகிறது. ஆனால், என்னை மட்டுமே தொடர்ந்து விடுதலை செய்யவில்லை.
சென்ற 18-7-2007 நாள் அறிவுரைக் கழகம் வாயிலான எனது விடுதலை கோரிக்கையை அரசாணை எண் டி-891 உள்துறை (சிறை) நிராகரித்துவிட்டது தமிழக அரசு. சென்ற ஆண்டு எனது வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை இதுவரை செயல்படுத்தவில்லை.
எனது பெற்றோர் மிகவும் வயதானவர்கள். பருவமடைந்த மகள். எனது ஆதரவும், அருகாமையும் அவசியமானதாக உள்ளது.
ஐயா, இந்த முறை அறிஞர் அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு நாளான செப்டம்பர் 15-ம் தேதியிலாவது ஏனைய ஆயுள் சிறைவாசிகளுடன் எனது விடுதலையையும் சாத்தியப்படுத்துமாறு தங்களை தாழ்மையுடனும், பணிவன்புடனும் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் நளினி.












Click it and Unblock the Notifications