அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி 1-7-2009 முதல் உயர்த்தி வழங்கப்பட்டதையொட்டி தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் அகவிலைப்படியை 1-7-2009 முதல் ஐந்து சதவீதம் உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி 1-7-2009 முதல் முன் தேதியிட்டு, நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும்.
அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு ரூ.955 கோடியும், நடப்பாண்டில் ரூ.637 கோடியும் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் சங்கம் வரவேற்பு:
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் கோ.சூரியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையி்ல்,
மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வை முதல்வர் வழங்கி உள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
ஆனால் கருணையுள்ளம் கொண்ட முதல்வர் கேட்காமலேயே அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அகவிலைப்படி உயர்வின் மூலம் ரூ.300 முதல் ரூ.3,000 வரை ஊதியம் கூடுதலாக கிடைக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications