இந்திய வீரர் தலையை கொய்தவருக்கு ரூ. 1 லட்சம் தந்த முஷராப்
இஸ்லாமாபாத்: இந்திய ராணுவ வீரர் ஒருவரின் தலையை கொய்தா தீவிரவாதி ஒருவனுக்கு முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ்முஷராப் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கிய செய்தி தற்போது வெளிவந்து கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் இலியாஸ் காஷ்மீரி சமீபத்தில் பாகிஸ்தானின் வசிர்ஸ்தான் பகுதியில் நடந்த தாக்குதலில் அமெரிக்க படையால் கொல்லப்பட்டான்.
1990களில் ஜம்மு & காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த இவன் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவை பிரிவிலும் கமாண்டோவாக பணியாற்றியுள்ளான்.
கடந்த 2000ம் ஆண்டு, பிப்ரவரி 26ம் தேதி காஷ்மீரி மேலும் 25 தீவிரவாதிகளுடன் இணைந்து நைக்யால் பகுதியில் எல்லை தாண்டி வந்து இந்திய வீரர்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்தியுள்ளான்
அவர்கள் இந்திய வீரர்களின் பதுங்கு குழியை சுற்றி வளைத்து, அதற்குள் வெடிகுண்டுகளை வீசினர். மேலும் அந்த சம்பவத்தில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரை கடத்தி சென்றனர்.
பின்னர் அந்த வீரரின் தலையை துண்டித்த அவன், அதை முஷராப் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் முன் கொடுத்துள்ளான். அவனது இந்த செயலை பாராட்டி அப்போதைய ராணுவ தளபதி முஷராப் அவனுக்கு ரூ. 1 லட்சம் பரிசு கொடுத்துள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று அந்த இந்திய வீரரின் தலையுடன், காஷ்மீரி இருக்கும் படத்தை வெளியிட்டதை அடுத்து உண்மை வெளியே வந்துள்ளது.