ஓடும் ரயிலிலிருந்து கணவரை தள்ளி கொன்று மனைவியிடம் பலாத்காரம்-7 பேர் கைது
மும்பை: குஜராத்தைச் சேர்ந்த வியாபாரியை ஓடும் ரயிலிலிரு்நது தள்ளி விட்டு விட்டு, அவரது மனைவியிடம் பலாத்காரத்தில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட திருட்டுக் கும்பலை போலீஸார் 48 மணி நேரத்தில் கைது செய்தனர்.
குஜராத்தைச் சேர்ந்தவர் திலீப் சலாத் (21). இவர் ஒரு வியாபாரி. புனே - வெரவால் எக்ஸ்பிரஸ் ரயிலில் வியாழக்கிழமை இரவு இவர் பயணித்தார்.
பொதுப் பெட்டியில் மனைவி மாலா, மாலாவின் சகோதரர் ஷியாம், அவரது மனைவி தேஜால் ஆகியோருடன் பயணித்தார். மாலா கர்ப்பிணி ஆவார்.
அப்போது உட்காருவதில் இடம் பிடிப்பது தொடர்பாக சலாத்துக்கும், அங்கிருந்த இர்பான் ஷேக், சுனில் புதாரி, போலேநாத் ஜாதவ், சச்சின் திவேகர், ராகுல் லினபாண்டி, கணேஷ் கெய்க்வாட், இர்பான் கான் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த ஏழு இளைஞர்களுக்கும் வயது 18 முதல் 21க்குள்தான்.
அப்போது அந்தக் கும்பல் தங்களிடமிருந்த கத்தியைக் காட்டி மிரட்டினர். பின்னர் சலாத்தைத் தாக்கி அவர் வைத்திருந்த ரூ. 2,250 பணத்தைப் பறித்துக் கொண்டனர். அதன் பின்னர் மாலாவிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.
இதைப் பார்த்ததும், சலாத்தும், மற்ற பயணிகளும் அந்தக் கும்பலுடன் போராடத் தொடங்கினர். இந்த நிலையில் திடீரென சலாத்தை அக்கும்பல் ரயிலிலிருந்து பிடித்துத் தள்ளி விட்டது. இதில் படுகாயமடைந்த சலாத் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது ரயில், பத்லாபூர் - வங்கானி இடையே ஓடிக் கொண்டிருந்தது.
பின்னர் கல்யாண் ரயில் நிலையத்தை ரயில் நெருங்கியபோது அந்த ஆயுதம் தாங்கிய கும்பல் கீழே குதித்துத் தப்பி விட்டது.
ரயில் கல்யாண் வந்து சேர்ந்ததும் மாலா குடும்பத்தினர் ரயில்வே பாதுகாப்புப் படையினரை அணுகி உதவி கோரினர். ஆனால் அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரோ சட்டையே செய்யவில்லை. இதையடுத்து ரயில்வே போலீஸாரை அணுகினர் மாலா குடும்பத்தினர்.
அவர்கள் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். இதில் அம்பேர்நாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த 7 பேரும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கும்பல் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையது. அதில் இருவர் தானே போலீஸாரால் தேடப்பட்டு வருபவர்கள் ஆவர்.
மாலா குடும்பத்தினர் உதவி கேட்டு வந்தபோது பணியைச் செய்யாமல் அலட்சியமாக இருந்த ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவிகளிடம் ஆர்.பி.எப் அட்டகாசம்:
இதற்கிடையே, கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சுற்றுலா சென்ற கொல்கத்தா மாணவிகளிடம் குடிபோதையில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் சில்மிஷம் செய்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் கேரளாவுக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர். எர்ணாகுளத்தில் அவர்கள் கொல்கத்தா செல்வதற்காக ரயில் ஏறினர்.
அப்போது அவர்கள் ரிசர்வ் செய்து வைத்திருந்த சீட்களில் வேறு சில ஆண்கள் அமர்ந்திருந்தனர். அவர்களை எழுந்திருக்கச் சொன்னபோது அந்த ஆண்கள், மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்டு சில்மிஷம் செய்தனர்.
இதையடுத்து மாணவிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தினர். சிறிது நேரத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அங்கு வந்தனர்.
வந்த அனைவருமே குடிபோதையில் இருந்தனர். தவறு செய்த ஆண்களை தட்டிக் கேட்பதற்குப் பதில் மாணவிகளைத் திட்டிய அந்த போலீஸார், அவர்களின் துப்பட்டாக்களைப் பிடித்து இழுத்து அநாகரீகமாக நடந்து கொண்டனர்.
சம்பந்தப்பட்ட மாணவிகள் அனைவரும் ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி படித்த கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.