ஐஐடி பேராசிரியர்கள் உண்ணாவிரதம்-கைவிட சிபல் கோரிக்கை
டெல்லி: ஐஐடி பேராசிரியர்கள் திட்டமிட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் கைவிட வேண்டும் என மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக புகழ் பெற்ற ஐஐடி கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் அறிவித்திருப்பது சரியல்ல. இந்தப் போராட்டத்தை அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
ஐஐடி நிறுவனங்கள் நோபல் பரிசு பெறத் தகுதியுடையவர்களை உருவாக்க வேண்டும் என்பது நமது கனவு. நோபல் பரிசுக்குரியவர்களை உருவாக்குபவர்கள் பட்டினிப் போராட்டம் நடத்துவார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அறிவுப் பசியுடன்தான் இருக்க வேண்டும். அவர்களே பட்டினி கிடந்து போராடக் கூடாது.
ஐஐடிகளின் சுதந்திரத்தில் ஒருபோதும அரசு தலையிட்டதில்லை. இருப்பினும் அவர்களது ஊதிய விகிதம் முறைப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டால் நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும். எனவே ஆசிரியர்கள் சேர்க்கை மற்றும் பதவி உயர்வு போன்றவற்றுக்கு சில தகுதிகளை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இதை பேராசிரியர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் இது நியாயமற்றது என்றார் சிபல்.












Click it and Unblock the Notifications