கொல்கத்தாவில் கடும் மின்வெட்டு- மாடி ஏறிச் சென்ற புத்ததேவ்
கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று கடும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் நகரமே ஸ்தம்பித்தது. முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி, லிப்ட் இல்லாமல் மாடிப் படியேறி செல்லும் நிலை ஏற்பட்டது.
கொல்கத்தாவில் நேற்று காலை தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள மஹேஸ்தலா என்ற இடத்தில் மின் விநியோக வயர் அறுந்து போனது. இனால் 635 மெகாவாட் மின்சாரம் விநியோகம் இல்லாமல் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து கொல்கத்தா மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.
இதனால் கொல்கத்தாவில் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது. மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள ரைட்டர்ஸ் பில்டிங் பெரும் சிரமத்திற்குள்ளானது. அதேபோல உயர்நீதிமன்றம், கோர்ட்டுகளில் பணிகள் முடங்கின. ராஜ்பவனிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி மற்றும் அமைச்சர்கள் லிப்ட் இயங்காததால் மாடிப்படிகளில் ஏறிச் சென்றனர்.
மெட்ரோ ரயில் போக்குவரத்தும் சுமார் முக்கால் மணி நேரம் பாதிக்கப்பட்டது.