For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் பயங்கரம்- தொழிலாளர்கள் தாக்கி பிரிகால் துணைத் தலைவர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கோவையைச் சேர்ந்த பிரபல பிரிகால் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராய் ஜார்ஜை, தொழிலாளர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 9 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டு வருவாய் ரூ. 633 கோடியைக் கொண்ட பிரிகால் நிறுவனம், கோவையைச் சேர்ந்த முன்னணி ஆட்டோ உதிரிபாக தயாரிப்பு நிறுவனமாகும்.

சமீப காலமாக நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமையன்று 35 தொழிலாளர்கள் திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

இந்தத் தகவல் பரவியதும், தொழிலாளர்கள் பெரும் கும்பலாக பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள முதலாவது உற்பத்திப் பிரிவுக்கு விரைந்தனர்.

உள்ளே புகுந்த தொழிலாளர்கள் கம்ப்யூட்டர்கள், கண்ணாடி ஜன்னல்கள், பர்னிச்சர்களைத் தாக்கி சேதப்படுத்தினர்.

இதைத் தடுக்க முயன்ற நிறுவன அதிகாரிகளையும் வெறித்தனமாக தாக்கினர். இதில் ராய் ஜார்ஜ் நெற்றியில் பலமான அடி விழுந்தது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று ஜார்ஜ் உயிரிழந்தார்.

கொல்லப்பட்ட ஜார்ஜுக்கு 46 வயதாகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு ஊழியர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் பெண் ஆவார்.

ராய் ஜார்ஜ் பலியானதைத் தொடர்ந்து பிரிகால் நிறுவன தொழிற்சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, குருசாமி, மணிவண்ணன், பாலசுப்ரமணி, ராஜேந்திரன், ராமமூர்த்தி, வேல்முருகன், சம்பத் குமார், சிவக்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, ராய் ஜார்ஜின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

சிஐஐ கண்டனம்

இந்த சம்பவம் குறித்து தென் பிராந்திய இந்திய தொழிலக சம்மேளனம் (சிஐஐ) அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைப்பின் தலைவர் சி.ஆர்.சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில், எந்த தொழிலாளர் பிரச்சினையாக இருந்தாலும் அதை பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க வேண்டும். இதுபோல வன்முறையில் ஈடுபடக் கூடாது.

தமிழகத்தில் சமீப காலமாக தொழிலாளர்கள் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு தலையிட்டு தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X