கிருஷ்ணா-இலங்கை அமைச்சர் ஆலோசனை
நியூயார்க்: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்றம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமாவும் நியூயார்க்கில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
பூமி வெப்பமாதல் குறித்த ஐ.நா. மாநாட்டில் பங்கேற்பதற்காக இரு தலைவர்களும் நியூயார்க் வந்துள்ளனர். மாநாட்டின் ஒரு பகுதியாக கிருஷ்ணாவும், பொகல்லகாமாவும் சந்தித்துப் பேசினர்.
இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில், இடம் பெயர்ந்த மக்களின் மறு குடியேற்றம் குறித்து முக்கியமாக பேசினேன். தமிழர் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடந்து வருவதாகவும், அதேசமயம், மறு குடியேற்றமும் நடந்து வருவதாகவும் இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரப் பகிர்வு குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்படவில்லை. தற்போது மறு குடியேற்றத்தில் மட்டுமே தாங்கள் கவனம் செலுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர் என்றார் கிருஷ்ணா.