ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டுள்ளார் - பாக். பிரதமர்
இஸ்லாமாபாத்: முன்னாள் லஷ்கர் இ தொய்பாவும் இன்னாள் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் முகம்மது சயீத் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் மூளையாக கருதப்படுபவர் சயீத். இவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதுகுறித்து கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது பாகிஸ்தான்.
இதையடுத்து அமெரிக்காவிடம் இந்தியா முறையிட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்க கடுமையாக நெருக்க ஆரம்பித்ததால், தற்போது சயீத்தை கைது செய்துள்ளது பாகிஸ்தான்.
சில நாட்களுக்கு முன்பு சயீத் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நேற்று முன்தினம் அவரது நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. வீட்டுக் காவலில் அவர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முல்தான் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியிடம் சயீத் கைது செய்யப்பட்டுள்ளாரா என்று கேட்கப்பட்டது.
அதற்கு கிலானி பதிலளிக்கையில், இதுகுறித்து உள்துறை அமைச்சகம் உங்களுக்கு உரிய பதிலைத் தரும். ஆனால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவே நான் நம்புகிறேன்.
அவருக்கு எதிரான ஆதாரம் மற்றும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கிலானி.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக கெளரவமான முறையில் பாகிஸ்தான் விசாரணை மேற்கொண்டுள்ளது என்றார்.