வேலைப்பளு கேலிக் கூத்தாம் - மீண்டும் சர்ச்சையில் சசி தரூர்
டெல்லி: எகானமி வகுப்பை மாட்டுத் தொழுவம் என்று விமர்சித்து வாங்கிக் கட்டிக் கொண்ட சசி தரூர் மறுபடியும் ட்விட்டர் மூலம் புதுப் பிரச்சினையை உருவாக்கியுள்ளார்.
இம்முறை தனது வேலைப்பளு குறித்துப் புலம்பியுள்ள சசி தரூர், 17 மணி நேரம் வேலை பார்ப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்று கூறியுள்ளார்.
தனது வேலைப்பளு குறித்து ட்விட்டரில் சசி தரூர் வெளியிட்டுள்ள புதிய செய்தியில், கிட்டத்தட்ட 17 மணி நேரத்திற்கு நாளை வேலை பார்க்க வேண்டியுள்ளது. இது கேலிக்கூத்தாக உள்ளது. ஒரு பயணத்திலிருந்து வந்த பின்னர் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். (லைபீரியா பயணத்திலிருந்து வந்ததைச் சொல்கிறார்)
மலை போல கோப்புகள் குவிந்து கிடக்கின்றன. ஒரு வாரம் நான் டெல்லியில் இல்லை. எனவேதான் இந்த நிலை. இரண்டு பத்திரிக்கையாளர்கள் என்னை ஆப்பிரிக்காவில் வைத்து பேட்டி கண்டனர் என்று கூறியுள்ளார் சசி தரூர்.
வேலைப்பளுவை கேலிக் கூத்து என்றும், கோப்புகள் குவிந்து கிடக்கிறதே என்று சலித்துக் கொண்டும் அவர் எழுதியுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மத்திய அமைச்சர் பதவி என்பது பெட்டிக் கடையில் உட்கார்ந்து பீடி, சிகரெட் விற்பதைப் போல என்று நினைத்து விட்டாரோ என்னவோ ...!