முகாம் தமிழர்கள் விடுதலை பெற வேண்டும்-யுஎஸ்
சென்னை: வன்னி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்கள் விடுதலை பெற வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோதி ஜே. ரோமர் கூறியுள்ளார்.
ரோமர் நேற்று சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஆன்ட்ரூ சிம்கின், ஸ்காட் கோனிக், ஸ்காட் உட்டாட், ரோகித் நேபால், பின்னி ஜேக்கப் உடன் இருந்தனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் வெளியில் வந்த ரோமர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கேள்வி: முதல்வர் கருணாநிதியை சந்தித்ததற்கான நோக்கம்?
பதில்: எல்லா நாட்டுடனும் நல்லுறவை மேம்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. நான் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்ற உடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எனக்கு ஒரு கட்டளையிட்டார். இந்தியா முழுவதும் சென்று அரசியல் தலைவர்களை சந்தித்து, அமெரிக்க - இந்திய உறவை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் நீங்கள் பாடுபடுங்கள் என்றார்.
அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்தேன். விருந்தோம்பல் அடிப்படையில் நடந்த சந்திப்பு இது. சந்திப்பின்போது, இரு நாட்டு உறவு, பொருளாதார பிரச்சினைகள் பற்றி பேசினோம்.
தற்போது, அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டுள்ளார். மீண்டும் அவர் நவம்பர் மாதம் அங்கு வருகிறார். அது குறித்தும் எல்லா அரசியல் தலைவர்களையும் சந்தித்து வருகிறேன். உலக அளவில் இந்தியாவும், அமெரிக்காவும் கைகோர்த்து ஒற்றுமையாக செயல்படுகிறது.
கேள்வி: கருணாநிதி உடனான இந்த சந்திப்பு முழு திருப்தி அளிக்கிறதா?
பதில்: மிகவும் திருப்தி அளிக்கிறது. இருநாட்டு வேலைவாய்ப்பு, முதலீடு தொடர்பாகவும், அரசியல் நிலவரம் குறித்தும் பேசினோம். உலக அளவில் உள்ள பெரிய அரசியல் தலைவர்களுக்கு இணையாக நிபுணத்துவம் பெற்ற சிறந்த தலைவர், முதல்வர் கருணாநிதி.
கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசினீர்களா?.
பதில்: அது குறித்தும் பேசினோம். இப்போதும் அமெரிக்கா, இலங்கை தமிழர்களுக்காக உதவி செய்து வருகிறது. இலங்கை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை பெற்று வெளிவர அமெரிக்காவும் விரும்புகிறது. அவர்கள் வாழ்ந்த இடத்திற்கே மீண்டும் செல்ல வேண்டும். அவர்களின் புணரமைப்புக்காக உதவி செய்ய அதிக அக்கறையுடன் உள்ளோம்.
ஏற்கனவே, 80 மில்லியன் அமெரிக்க டாலர் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக செலவு செய்துள்ளோம். அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு சென்று முன்னேற கல்வி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க நாங்கள் விரும்புகிறோம். இது ஒரு உணர்வு சம்பந்தப்பட்டது. அதை நாம் மதிக்க வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியும் சரி, நாங்களும் சரி, இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக அதிக முன்னுரிமை கொடுக்கிறோம் என்றார்.