அவிநாசியில் ஆசிரியை கற்பழிப்பு-2 பேர் கைது!
அவிநாசி: அவிநாசி அருகே பள்ளி ஆசிரியையை கற்பழித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான இவர் சத்தியமங்கலத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு அவிநாசி வந்த அவர் புதிய பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். பின்னர் சத்தியமங்கலத்தை சேர்ந்த அருள்குமார், முகமது இப்ராஹிம் ஆகியோருடன் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுள்ளார்.
அப்போது மல்லிகாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை தூக்கி சென்ற அருள்குமார், முகமது இப்ராஹிம் இருவரும் அவரை குப்பாண்டாம்பாளையம் அருகே ஒரு இடத்தில் வைத்து கற்பழித்துள்ளனர்.
மயக்கம் தெளிந்து எழுந்த மல்லிகா இது குறித்து அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் கற்பழித்த அருள் குமார், இப்ராஹிம் இருவரும் தான் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியையும் திருடிவிட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீஸார், பள்ளி ஆசிரியை கற்பழித்த இருவரையும் கைது செய்தனர்.
தற்போது மல்லிகா, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.