தாழ்த்தப்பட்ட பிரிவு நீதிபதிகளுக்கு எதிராக பிரசாரம்- 'மத்திய அரசு மெளனம் ஏன்'?
டெல்லி: நீதித்துறையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக சிலர் அவதூறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது சொத்து குவிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. அதேபோல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதும் திட்டமிட்டு அவதூறான புகார்கள் கூறப்படுகின்றன.
குறிப்பாக நீதித்துறையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக சில பத்திரிகைகள் மற்றும் டிவிக்கள் பெரிய அளவில் பிரசாரம் செய்து வருகின்றன.
இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மாநிலங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களில் உள்ள தலித்துகளுக்கு எதிரானவர்கள் இத்தகைய செயல்களில் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால், இதை மத்திய அரசு வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான இதுபோன்ற பிரசாரம் தொடருமேயானால் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் தானாகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.