திருவண்ணாமலையில் பட்டாசு வெடித்து 2 மாடி வீடு தரைமட்டம்- 11 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த வீட்டில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 2 மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டடம் நொறுங்கி தரைமட்டமானது. இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை முகல் புறா தெருவைச் சேர்ந்தவர் பாபா பாய். ஜவுளி வியாபாரி. தனது சொந்த வீட்டின் தரை தளத்தில் வசித்து வருகிறார். அதற்கு மேல் 2 மாடி கட்டிடங்களை வாடகைக்கு விட்டுள்ளார். இந்த 2 மாடியிலும் இரு குடும்பத்தை சேர்ந்த 15 பேர் வசித்து வந்தனர்.
பாபா பாய் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வாங்கி வைத்து விற்பனை செய்வாராம். அதே போல் இந்த ஆண்டும் ஏராளமான தீபாவளி பட்டாசுகளை தன்னுடைய வீட்டில் வாங்கி வைத்து இருந்தார்.
நேற்று இரவு 9 மணி அளவில் பட்டாசுகளில் தீப்பிடித்தது. பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் தரைதளமும், 2 மாடிகளும் இடிந்து விழுந்து அந்த கட்டிடமே தரைமட்டமானது.
கட்டிடத்தில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். திருவண்ணாமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 ஆண்கள் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
மற்ற உடல்களையும் மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications