மகாராஷ்டிர முதல்வர் மீது எம்எல்ஏ ஆதரவாளர் செருப்பு வீச்சு
நான்டெட்: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாத காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏவின் ஆதரவாளர் ஒருவர் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் மீது செருப்பை வீசினார்.
ஆனால் செருப்பு அவர் மீது படாமல் 'மிஸ்' ஆகிவிட்டது.
லோகா தொகுதி சுயேச்சை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதாப் பாட்டீல் சிக்லிகர், கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசை ஆதரித்து வந்தார். இம்முறை காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட விரும்பம் தெரிவித்தார்.
ஆனால், தேவைப்படும்போது இவரது ஆதரவை பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் சீட் தர மறுத்துவிட்டது. மேலும் இந்தத் தொகுதியை தனது கூட்டணிக் கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டது.
இதனால் பாட்டீலின் ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
இந் நிலையில் லோகா தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் சவாண் சென்ற போது அவரை பாட்டீலி்ன் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்தனர்.
அப்போது சவாணை நோக்கி செருப்பு பறந்து வந்தது. அதற்கு, அவர் நகர்ந்துவிட்டதால் செருப்பு அவர் மீது படவில்லை.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துவிட்டு முதல்வரை அவசரமாக அங்கிருந்து வெளியேற்றினர்.
செருப்பு வீசிய நபர் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.