கே.பியை விசாரிக்க கொழும்பு செல்லும் சிபிஐ குழு
சென்னை: புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவரான கே.பி. என்ற செல்வராசா பத்மநாதனிடம் விசாரணை நடத்த சிபிஐ குழு இலங்கை செல்கிறது.
பிரபாகரனின் மறைவையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக அறிவித்துக் கொண்ட செல்வராசா பத்மநாதன் இலங்கை ராணுவத்தால் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
கொழும்பில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் இலங்கை ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. புலிகளின் பணம், ஆயுத நெட்வோர்க் குறித்த முழுத் தகவல்களை அறிந்தவர் என்பதால் அவரை தீவிரமாக விசாரித்து வருகிறது இலங்கை அரசு.
இந் நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாகவும் அவரை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. சிபிஐ தலைமையில் அமைக்கப்பட்ட உளவுப் பிரிவுகளின் குழு தான் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்து வருகிறது.
இந் நிலையில் இந்தக் குழுவின் தலைவரான பி.என். மிஸ்ரா கூறுகையில், கேபியை விசாரி்க்க இலங்கையிடம் மத்திய அரசு அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் எங்கள் குழு கொழும்பு செல்லும் என்றார்.
முன்னதாக கேபியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மட்டும் இலங்கை அரசுக்கு அனுப்பி வைப்பது என்று சிபிஐ திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்போது தானே நேரடியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications