ஆப்கனிலிருந்து விலகுங்கள்-ஐரோப்பிய நாடுகளுக்கு பின்லேடன் எச்சரிக்கை
இதுதொடர்பான வீடியோ ஒன்றை இஸ்லாமிய இணையதளங்கள் சில வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கு என்று பொதுவாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், ஜெர்மனியைத்தான் குறிப்பிட்டு எச்சரித்துள்ளார் பின் லேடன் எனக் கூறப்படுகிறது.
காரணம், அந்த வீடியோவில் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழியில் சப் டைட்டில் இடம் பெற்றுள்ளது. ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த எச்சரிக்கையில் பின் லேடன் கூறியிருப்பதாக கூறப்படுவது...
ஐரோப்பா இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உலக ஏற்றுமதியில் ஜெர்மனி தொடர்ந்து முதலிடத்தில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதரப் போரில் சிக்கி ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
ஒடுக்கப்பட்டோரின் சார்பாக, அடக்கியாள நினைப்போருக்குப் பதிலடி கொடுக்க அல்லா எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உங்களது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக் கொள்ளுங்கள். மாட்ரிட், லண்டனில் ஏற்பட்ட ரத்தகளறிச் சம்பவங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதை மீண்டும் பார்க்க விரும்பினால் தொடர்ந்து அமெரிக்காவுடன் கை கோர்த்து ஆப்கானிஸ்தானில் நீங்கள் நடமாடலாம் என்று அதில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலை ஜெர்மனி அதிகாரிகள் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளனர். காரணம், ஜெர்மனுக்கு வந்துள்ள நான்காவது அல் கொய்தா மிரட்டல் இது.
ஆப்கானிஸ்தானில் 4200 ஜெர்மன் வீரர்கள் நிலை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை வாபஸ் பெற வேண்டும் என ஜெர்மனியிலேயே கோரி்க்கைகள் வலுத்து வருகின்றன.
தற்போது தொடர்ந்து மிரட்டல்களை விடுத்து வருவது தலிபான் மற்றும் அல் கொய்தாவின் கூட்டு வேலை என ஜெர்மனி பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த எச்சரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அமெரிக்க, இஸ்ரேலிய, அரபு உளவு அமைப்புகளும் ஜெர்மனியை அறிவுறுத்தியுள்ளனவாம்.