ஏர் இந்தியா ஸ்டிரைக் - மும்பை, சென்னை, கொல்கத்தா பைலட்டுகள் புறக்கணிப்பு
பைலட்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகையை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்து விட்டது. இதையடுத்து எக்சிகியூட்டிவ் விமானிகள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.
இதனால் ஏற்கனவே நிதிச் சுமையால் தடுமாறிக் கொண்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம் பெரும் தடுமாற்றத்துக்குள்ளாகியுள்ளது.
ஸ்டிரைக் காரணமாக கடந்த 2 நாட்களில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வி்மானங்கள் 30 ரத்து செய்யப்பட்டன.
நேற்று நிர்வாகத்திற்கும், விமானிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஐந்து மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.
அதன் பின்னர் விமானிகளின் பிரதிநிதியான கேப்டன் வி.கே.பல்லா கூறுகையில், உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகையை மீண்டும் தொடர நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. அதேசமயம், பைலட்டுகளுக்கான 3 மாத சம்பள பாக்கி குறித்து அவர்கள் உறுதி அளிக்கவில்லை.
அதையும் அவர்கள் தருவதாக உறுதி அளித்தால்தான் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவது குறித்து நாங்கள் யோசிக்க முடியும் என்றார்.
இதனால் பைலட்டுகளின் ஸ்டிரைக் தொடருகிறது. இதற்கிடையே இன்றைக்குள் நிலைமை சரியாகி விடும் என ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஜித்தேந்திரா பார்கவா நம்பிக்கை தெரிவித்தார்.
சனிக்கிழமை 11 விமானங்களையும், நேற்று 22 விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்தது.
இந்த நிலையில், மும்பை, சென்னை, கொல்கத்தா பைலட்டுகள், ஸ்டிரைக்கில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக நிர்வாகத்துடன் அவர்கள் ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளனர். இன்று இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதேசமயம், டெல்லியில் உள்ள பைலட்டுகள் இன்னும் ஸ்டிரைக்கில் நீடிக்கின்றனர்.
வேலைநிறுத்தம் செய்து வரும் பைலட்டுகளுடன் உடன்பாட்டை எட்டும் முயற்சியில் ஏர் இந்தியா நிர்வாகம் இறங்கியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த 20 பைலட்டுகளுடன் நேற்று அவசரமாக பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கமிட்டி ஒன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த கமிட்டியில், நிதிப் பிரிவு செயல் இயக்குநர், தொழிலாளர் உறவுப் பிரிவு செயல் இயக்குநர், பொது மேலாளர் மற்றும் பைலட்டுகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவர். இவர்கள் பைலட்டுகளின் பிரச்சினை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பர்.