குஜராத்தில் கிராமமே இல்லை-சொல்கிறார் மோடி
டெல்லி: குஜராத்தில் கிராமங்களே இல்லை என்று கூறியுள்ளார் முதல்வர் நரேந்திர மோடி.
இதை அவர் கடந்த மாதம் டெல்லியில் நடந்த மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவற்றை சட்ட அமைச்சகம் தனது இணையத்தில் தற்போது தான் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்த செய்தி வெளிவந்துள்ளது.
சமீபத்தில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, வழக்குகளை விரைந்து முடிக்கவும், ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையிலும் இந்தியா முழுவதும் கிராம நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இது கிராம ராஜ்யம் விரும்பிய காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி நடைமுறைப்படுத்தப்படும் என கூறியிருந்தார்.
கூட்டத்தில் அது தொடர்பாக பேசும் போது மோடி மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தங்களது பகுதிகளில் கிராமங்களே இல்லை என பேசியுள்ளனர். ஷீலா தீட்சித் சொன்னது போல் டெல்லியில் கிராமம் எதுவுமில்லை. அனைத்தும் நகர்ப்புறம் ஆகிவிட்டது.
ஆனால், குஜராத்திலும் கிராமமே இல்லை என்று மோடி கூறியிருப்பது ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.
இது குறித்து சட்ட அமைச்சகம் தனது இணையத்தில் வெளியிட்டிருப்பதாவது:
கிராம நீதிமன்றங்கள் குறித்து பேசும்போது குஜராத் முதல்வர், தனது மாநிலத்தில் கிராமங்களே இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் அங்கு இந்த திட்டம் பயன் தருமா என தெரியவில்லை.
ஆனால், அவர் கிராம நீதிமன்றங்களுக்கு பதிலாக நடமாடும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.