சாதி, தீண்டாமையும் மனித உரிமை மீறலே-ஐநா
டெல்லி: சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை உள்ளிட்டவற்றையும் மனித உரிமை மீறலாக அங்கீகரிக்கவுள்ளதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
தற்போது ஜெனிவாவில் நடந்து வரும் ஐநாவின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
ஆனால், மனித உரிமைக் கவுன்சிலின் இந்த முடிவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாதி பிரச்சனைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்லக் கூடாது என்று அது கோரியுள்ளது.
அதேசமயம், கடந்த நான்கு மாதங்களுக்கு முன் ஐநா வெளியிட்ட வேலை மற்றும் இருப்பிடங்களில் சாதி பாகுபாடு ஒழிப்பு குறித்த வரைவு கொள்கைக்கு முழு ஆதரவு தருவதாக நேபாளம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 16ம் தேதி நடந்த கூட்டத்தில் நேபாள அமைச்சர் ஜீத் பகதூர் டார்ஜீ கௌதம் பேசுகையில்,
சாதி ஒழிப்பு தொடர்பான ஐநா மனித உரிமை அமைப்பின் ஆவணத்துக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான அவர்களது ஆக்கப்பூர்வ முயற்சிகளுக்கு உதவுவோம் என்றார்.
நேபாளத்தின் ஆதரவுக்கு ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
சாதி பிரச்சனைகள் பெருமளவில் இருக்கும் நேபாளம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளது. இது மற்ற நாடுகளுக்கு நல்ல முன்மாதிரியாகவும், ஊக்கம் தருவதாகவும் இருக்கும்.
கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த போது இதை இந்திய அரசிடம் வலியுறுத்தினேன். சாதி பிரச்சனை இந்தியாவின் தேசிய பிரச்சனைகளில் ஒன்று. ஆனால், தலைவர்கள் அதற்கு எதிராக போராட வேண்டும்.
கடந்த 2006ம் ஆண்டு இந்திய பிரதமர் மன்மோகன் தீண்டாமை ஒரு இனவெறி செயல் என கூறியிருப்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன் என்றார் பிள்ளை.
தென் ஆப்ரிக்க தமிழரான பிள்ளை, தமிழகத்தில் மதுரைக்கு அருகில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஐ.நாவின் இந்த ஆவணம் குறித்து ஐரோப்பிய யூனியனின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாதி பாகுபாடுகளை களைவதே ஐரோப்பிய யூனியனின் முக்கிய குறிக்கோள். இந்த பிரச்சனை தொடர்ந்தால் மனித உரிமை கமிஷன் எதிர்காலத்தில் இதற்கு எதிராக வரைவு கொள்கையை தயாரித்து ஐநாவின் பொது சபையில் தாக்கல் செய்யும். அதன்மூலம் பெரிய அளவில் இப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
உலகம் முழுவதும் சுமார் 20 கோடி மக்கள் சாதி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இது சமுதாயத்திலும், கலாச்சாரத்திலும் ஆழமாக வேரூன்றிவிட்டது என்றார்.
இந்தியாவுக்கு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் இந்த முடிவு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டே டர்பனில் நடந்த மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டின்போது இந்தப் பிரச்சினை தலை காட்டியது.
அப்போது தீர்மானம் எதையும் நிறைவேற்ற விடாமல், சாமர்த்தியமாக அடக்கி விட்டது இந்தியா. ஆனால் இம்முறை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில், சாதி பாகுபாட்டை மனித உரிமை மீறலாக அங்கீகரிக்க தீர்மானமாக உள்ளதாக தோன்றுகிறது. இதனால் இந்தியாவின் நிலை சற்று சிக்கலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications