தாய்-மகன் கொலை-கேரள ஜோதிடருக்கு தொடர்பு?
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் அனந்தலட்சுமி மற்றும் அவரது மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரள ஜோதிடருக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மேற்குமாம்பலம் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணி. பெங்களூரில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனந்தலட்சுமி (39). மகன் சூரஜ் (12). கடந்த 24ம் தேதி பூட்டிய வீட்டில் தாயும் மகனும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதுதொடர்பாக தனிப் படைகள் அமைக்கப்பட்டு கொலையை செய்த ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சைதாப்பேட்டையை சேர்ந்த கேரள ஜோதிடர் ஒருவர் அடிக்கடி செல்போன் மூலம் அனந்த லட்சுமியிடம் பேசுவது வழக்கம் என்பது தெரியவந்தது.
மேலும் அவர் அனந்தலட்சுமியிடம் ஜாதப்படி தோஷம் உள்ளதால் கணவரை விட்டு நீங்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்றும், உங்கள் கணவர் பெங்களூரிலேயே இருக்கட்டும் என்றும் கூறியதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கேரள ஜோதிடரை, பிடித்து அசோக் நகர் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜோதிடரின் நண்பர்கள் சிலருக்கும் அனந்த லட்சுமியை தெரியும் என்றும் போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே அனந்த லட்சுமியிடம் செல்போனில் பேசும் வேறு சிலருடைய விவரங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளன.
அனந்தலட்சுமிக்கு கிட்டத்தட்ட தினசரி நள்ளிரவில் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. பெருமளவில் வந்துள்ள இந்த அழைப்புகள் நள்ளிரவில் தான் வந்துள்ளன. மேலும், இந்த குறிப்பிட்ட எண்ணுக்கு அனந்தலட்சுமியும் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அவரும் நள்ளிரவில்தான் பேசியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இந்தக் கொலை வழக்கில் துப்பு துலங்கி இருப்பதாகவும், இன்னும் 2 நாட்களில் குற்றவாளிகள் பிடிபடுவர் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.