சென்னை-கொசுத் தொல்லை குறைந்துவிட்டதாம்!

இது குறித்து சென்னை மாநகராட்சி சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கொசு அடர்த்தி என்பது ஒரு நிமிடத்தில் பிடிபடும் கொசுக்களின் எண்ணிக்கை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இந்த கணக்கிற்காக விசேஷ குழாய்கள் மூலம் கொசுக்கள் பிடிக்கப்படுகின்றன. அவற்றை கணக்கிட்டு பின்னர் 600 ஆல் பெருக்கி கொசு அடர்த்தி கண்டுபிடிக்கப்படும்.
இது 50 புள்ளிகளுக்கு குறைவாக இருந்தால் கொசு தொல்லை மிகவும் குறைவு என அர்த்தம். 51 முதல் 83 வரை இருந்த கொசு தொல்லை லேசாக இருப்பதாக கூறப்படுகிறது. 84க்கு அதிகமானால் கொசு தொல்லை அதிகம்.
கடந்த 12 மற்றும் 13ம் தேதி மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் சென்னையில் தண்டையார்பேட்டை, ஸ்டான்லி நகர், வண்ணாரபேட்டை, எம்ஜிஆர் நகர் மற்றும் மைலாப்பூர் கச்சேரி ரோடு ஆகிய இடங்களில் கொசு தொல்லை 80 புள்ளி அளவுக்கு இருப்பது தெரியவந்தது.
மேலும், அண்ணா நகரில் 72, ஜிஎன் செட்டி ரோட்டில் 64, லாய்ட்ஸ் ரோட்டில் 72 ஆக இருந்தன. இதையடுத்து மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு முறைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டன.
இதையடுத்து மீண்டும் 19 மற்றும் 20ம் தேதி கொசு அடர்த்தி கணக்கெடுக்கப்பட்டது. அப்போது அனைத்து இடங்களிலும் இது 40க்கும் குறைவாக இருந்தது. அண்ணா நகரில் மட்டும் 48 ஆக இருந்தது என்றார்.
மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானாந்தம் கூறுகையில், ஆகஸ்ட் 31ம் தேதி முதல் கொசு மருந்து அடித்து வருகிறோம். கொசு உருவாகும் சூழ்நிலைய இருக்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம். கால்வாய்கள், சேரி பகுதிகள், பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் தினமும் காலை மற்றும் மாலை மருந்து தெளிக்கப்பட்டது என்றார்.
சென்னை மேயர் சுப்ரமணியன் கூறுகையில், கடந்த ஆண்டை போலில்லாமல் இந்த ஆண்டு கொசு மருந்து அடிப்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசுக்கள் மூட்டையிடும் முக்கிய இடங்களாக வாய்க்கால்கள் மாறியிருப்பதால், அவற்றை தூர்வாறும் பணியையும் செய்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications