தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சப்ளையை இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய 3 எண்ணை நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குத்தான் அதிக ஏஜென்சிகள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மண்டலங்களாகப் பிரித்து சமையல் கேஸ் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் சமையல் கேஸ் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே சமையல் கேஸ் பதிவு செய்தவர்களுக்கு முறையாக கிடைக்கவில்லை. வழக்கமாக அதிகபட்சம் ஐந்து நாட்களுக்குள் கிடைக்கும் சிலிண்டர்கள் தற்போது 10 முதல் 20 நாட்கள் வரை ஆவதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சில இடங்களில் 25 நாட்கள் வரை கூட ஆவதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்டால் ஏஜென்சிகள் முறையாக பதிலளிப்பதில்லை. மாறாக, நாங்கள் என்ன செய்வது, சப்ளை குறைந்து விட்டது. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கூறி விடுகிறார்கள்.
இதில் 2 சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள் நிலை பரவாயில்லை. எப்படியாவது சமாளிக்க முடியும். ஆனால் ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் நிலைதான் மகா மோசமாக உள்ளது.
சென்னையில் அனைத்து பகுதியிலும் கேஸ் தட்டுப்பாடு நிலவுகிறது. அதேசமயம், தமிழகம் முழுவதும் இந்தப் பற்றாக்குறை காணப்படுகிறது. அனைத்து முக்கிய நகரங்களிலுஸ் கேஸ் தட்டுப்பாடுதான். இதுகுறித்து சென்னையில் உள்ள ஐ.ஓ.சி. ஏஜென்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணம் ஐ.ஓ.சி. அதிகாரிகள்தான். உயர் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பதற்காகவும் தங்களது பணித் திறமையை காட்டிக் கொள்வதற்காகவும் இது போன்ற யுக்திகளை ஆண்டு தோறும் செய்து வருகிறார்கள்.
மார்ச் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் அரையாண்டு கணக்குகளை ஒப்படைப்பதற்காக சிலிண்டர் நுகர்வு பயன்பாட்டை குறைத்து காண்பித்து வருகிறார்கள். எப்போதுமே இந்த 2 முறையும் சிலிண்டர் பயன்பாட்டை தங்கள் சீரிய நடவடிக்கையின் மூலம் குறைத்தது போன்ற மாயாஜால வித்தையை மேற்கொண்டு ஏஜென்சிகளுக்கு முறையாக வழங்கக்கூடிய ஒதுக்கீட்டை குறைத்து வழங்குகிறார்கள்.
இதன் மூலம் இந்த மாதத்தில் மட்டும் பல லட்சம் சிலிண்டர்கள் மிச்சப்படுத்தி செலவை குறைத்து இருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை கொடுக்கிறார்கள். அதிகாரிகள் பலன் அடைவதற்காக ஏஜென்சிகளையும், பொதுமக்களையும் அவதிப்படுத்துகிறார்கள். இப்படித்தான்
ஒவ்வொரு முறையும் எண்ணை நிறுவன அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.
இந்த உண்மை பொதுமக்களுக்கு தெரியாது. எனது ஏஜென்சிக்கு ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் சிலிண்டர்கள் வழங்குவார்கள். இந்த மாதம் 8 ஆயிரம் சிலிண்டர்கள்தான் கொடுத்து இருக்கிறார்கள். 20 சதவிகித சிலிண்டர்களை குறைத்து விட்டனர். இது பொதுமக்களை பாதிக்கிறது.இதே போல எல்லா ஏஜென்சிகளுக்கும் சிலிண்டர்களை குறைத்து இருக்கிறார்கள். ஆனால் பொது மக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியவில்லை.
இதுபற்றி ஐ.ஓ.சி. அதிகாரியிடம் கேட்டால், கேஸ் தட்டுப்பாடு எதுவும் இல்லை. வழக்கமான அளவு வினியோகம் செய்யப்படுகிறது என்று பொத்தாம் பொதுவாக கூறி முடித்தார்.
பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவதில் மட்டும் படு வேகமாக செயல்படும் இந்த நிறுவனங்கள் மக்களுக்கு மிக மிக அத்தியாவசியத் தேவையான கேஸ் சப்ளையில் கையை வைத்து சாபங்களை வாரிக் கட்டிக் கொள்வது ஏன் என்று புரியவில்லை.