அனுமதியின்றி பட்டாசு விற்கும் கடைகளுக்கு சீல்!
சென்னை: காவல்துறையின் அனுமதியின்றி வைக்கப்படும் பட்டாசுக் கடைகள் சீல் வைத்துப் பூட்டப்படும் என்று சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் இன்று காவல்துறை குடும்பத்தினருக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் தொடங்கியது. இதை ஆணையர் ராஜேந்திரனின் துணைவியார் உஷா ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் பேசுகையில்,
போலீசார் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் தங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்வதில் சிரமப்படுகின்றனர். இதனால் போலீஸ் குடும்பத்தில் பலர் படித்து விட்டும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித்தர வேண்டும் என்பதற்காக இதற்கு திட்டமிட்டு இந்த முகாமை இன்று ஏற்பாடு செய்து நடத்துகிறோம். இதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட 27 நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.
காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்த 800 பேர் பிளஸ் 2 முதல் பொறியியல் கல்வி வரையிலான தகுதியுடன் இந்த முகாமுக்கு வந்திருக்கிறார்கள். இவர்களில் 25 சதவீதம் பேருக்காவது இந்த முகாம் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.6 மாதம் கழித்து மீண்டும் இதேபோல ஒரு முகாம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
வட சென்னை பகுதியில் அனுமதியின்றி பல பட்டாசு கடைகள் இயங்கி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு உரிய அனுமதியும், உரிமமும் இல்லாமல் செயல்படும் பட்டாசு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார் ராஜேந்திரன்.