மருமகன் மிரட்டியதால் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் கலாவதி
மும்பை: தேர்தலில் போட்டியிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மருமகன் மிரட்டியதால் கலாவதி தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி. ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த விதவைப் பெண். கடன் அதிகரித்து விவசாயம் செய்ய முடியாமல் இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டவர்.
விதர்பா பகுதி விவசாயிகளின் அவல நிலையை கலாவதியின் நிலையை சுட்டிக் காட்டி ராகுல் காந்தி லோக்சபாவில் பேசியதால் நாடு முழுவதும் அறிந்த பெண்மணியானார் கலாவதி.
இந்த நிலையில், மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் வானி தொகுதியில், கலாவதியை வேட்பாளராக நிறுத்தியது விதர்பா ஜனாந்தோலன் சமிதி என்ற என்.ஜி.ஓ. அமைப்பு. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காரணம், இங்கு காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
இதையடுத்து காங்கிரஸ் தரப்பில் கலாவதியை விலக வைக்க பல்வேறு ரகசிய முயற்சிகள் நடந்தன. கலாவதியும் தான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று திடீரென அறிவித்தார். உடல் நலக்குறைவு என்று கூறி மருத்துவமனையிலும் சேர்ந்தார்.
ஆனால் திடீரென ஆம்புலன்ஸில் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதனால் ஒரே குழப்பமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென கலாவதி தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை எதிர்பார்த்திருந்த என்.ஜி.ஓ. அமைப்பு ஏற்கனவே பேபிதாய் பெய்ஸ் என்ற இன்னொரு விதவைப் பெண்ணை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்ய வைத்திருந்தது.
கலாவதி வாபஸ் பெற்றது குறித்து விதர்பா என்ஜிஓ சங்கத் தரப்பில் கூறுகையில், தேர்தலில் போட்டியிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கலாவதியை அவரது மருமகன் மிரட்டினார். இதனால்தான் கலாவதி வாபஸ் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.