விமான நிலையங்களில் ரயில்வே 'மே ஐ ஹெல்ப் யூ'!
கொல்கத்தா: ஏர் இந்தியா பைலட்டுகள் ஸ்டிரைக் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையங்களில் தவிக்கும் பயணிகளுக்காக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி உத்தரவிட்டர்.
மேலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் சென்று திரும்பி வர முடியாமல் தவித்த பயணிகளுக்காக சிறப்பு கப்பலை இயக்கவும் மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் முகுல் ராயை கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், தற்போது உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்படுகின்றன.
இவை தவிர நாட்டின் ஐந்து பெருநகரங்களிலும் ரயில்வே புக்கிங் மையங்களில் கூடுதலாக சிறப்பு கவுண்டர்களைத் திறக்கவும் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
விமான ஸ்டிரைக் முடிவடைந்துவிட்டாலும் இயல்பு நிலை திரும்பும் வரை நாளை வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.
உங்களுக்கு உதவலாமா...
இதுதவிர விமான நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு கவுண்டர்களை ரயில்வே நிர்வாகம் திறந்தது. டெல்லி உள்ளிட்ட முக்கியப் பெருநகரங்களில் இந்த கவுண்டர்கள் திறக்கப்பட்டன.