அமைச்சர் பங்கேற்ற புயல் நிவாரண விழாவில் தீ
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் போக்குவரத்து துறை அமைச்சர் கேஎன் நேரு கலந்து கொண்ட அரசு விழாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விழா பாதியில் ரத்து செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு வீசிய நிஷா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கும் விழா திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கேஎன் நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழா துவங்கிய சிறிது நேரத்தில் மேடையின் இடது புறத்தில் இருந்த டூம் லைட் ஒன்று வெடித்துச் சிதறியது. இதை தொடர்ந்து மண்டபத்தில் இருந்த டியூப்லைட் மற்றும் பேன்கள் ஒவ்வொன்றாக வெடிக்க துவங்கியது.
அதிலிருந்து தீ மளமளவென பற்றி எரியத் துவங்கியது. இதனால் இழப்பீடு வாங்க வந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்து, அலறியபடி ஓட்டம் பிடித்தனர். மண்டபம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதையடுத்து அமைச்சர் கேஎன் நேரு அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று மூன்று பேருக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகை வழங்கி விட்டு சென்றார். பாதுகாப்பு கருதி விழா பாதியில் ரத்து செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications