ஐம்பொன் சிலைகள்: விற்க முயன்ற நடிகை-நடிகர் கைது
சென்னை: சென்னையில் பழமையான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற துணை நடிகை, நடிகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன.
சென்னை புறநகர் பகுதியில் பழமையான வள்ளி- தெய்வானையுடன் உள்ள முருகன், விநாயகர், சிவன்- பார்வதி ஆகிய ஐம்பொன் சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில் அதை விற்க முயன்ற ஏஜென்டுகளை தொடர்பு கொண்டனர்.
பள்ளிக்கரணை அருகே உள்ள ஜல்லடியன்பேட்டை நெசவாளர் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு மாறுவேடத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரை ஏஜெண்டு அழைத்து சென்றார்.
அங்கிருந்த பெண் சிலைகளைக் காட்டி பேரம் பேசினார். 3 சிலைகளும் பழமை வாய்ந்தது என்பதால் ரூ.50 லட்சம் வரை விலை பேசினார் அந்தப் பெண்.
இதையடுத்து வெளியே மறைந்திருந்த போலீசாருக்கு தகவல் தந்தார் சப்-இன்ஸ்பெக்டர். அவர்கள் வீட்டை சுற்றி வளைத்து பெண் உள்பட வீட்டிலிருந்த 4 பேரையும் பிடித்தனர்.
விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் உமா மகேஸ்வரி (39) என்று தெரியவந்தது. இவர் சினிமா துணை நடிகை ஆவார். மேலும் சினிமா, டி.விக்கு துணை நடிகர்-நடிகைகளை ஏற்பாடு செய்து தரும் ஏஜெண்டாகவும் உள்ளார்.
அவருடன் இருந்த கொடுங்கையூரை சேர்ந்த பூபேந்திரன் என்ற பூபதி (27), திருச்செல்வம் (28), அறந்தாங்கியை சேர்ந்த அரி என்ற அரங்குளவன் (26) ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிலைகள் மீட்கப்பட்டன.
அரியும் டிவி தொடர்களில் நடித்து வருகிறார். ரேகா ஐ.பி.எஸ், அழகிய நாட்கள் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். பூபதி, திருச்செல்வம் 2 பேரும் பிரபல தாதா சேராவின் கூட்டாளிகள் என்று தெரியவந்துள்ளது.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலூர் புதுவசூர் பகுதியை சேர்ந்த விஜி என்ற விஜய முருகன் என்ற ஜெயவேல் (26) தான் இந்த சிலைகளை விற்க தந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஜெயவேலையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20க்கும் மேற்பட்ட விநாயகர், சரஸ்வதி, விஷ்ணு, காயத்ரி, சிவன், காமாட்சியம்மன், கருமாரியம்மன், ராஜராஜேஸ்வரி சிலைகளையும், 5 அடி உயர குத்து விளக்கு, வலம்புரி சங்கு, சூலம், பழமையான வாள், வில், அம்பு, உள்பட பல பழமையான பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.
ஜெயவேல் தன்னை பத்திரிகையாளர் என்றும் மனித உரிமைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் என்றும் கூறிக் கொள்பவர் ஆவார்.
மேலும் சிலைகளை விற்பனை செய்த சாமிநாதன் உள்பட பலரை போலீசார் தேடி வருகின்றனர். சிலைகளின் மதிப்பு குறித்து ஆராய தொல்பொருள் ஆய்வு துறையின் உதவி கோரப்பட்டுள்ளது.