ஜார்க்கண்ட்டில் தொடரும் ஜனாதிபதி ஆட்சி-பாஜக வழக்கு
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீடித்திருப்பதையும், சட்டசபையை தொடர்ந்து முடக்கி வைத்திருப்பதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜார்க்கண்ட் மாநில பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பான மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், பி.பி.செளகான் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசிலீத்த நீதிபதிகள், விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
முன்னதாக ஜார்க்கண்ட் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சேத் தாக்கல் செய்திருந்த மனுவில், உடனடியாக சட்டசபையைக் கலைக்க வேண்டும். மேலும் சட்டசபைக்கு உடனடியாக தேர்தல் நடத்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
உரிய காலத்திற்கு முன்பாகவே ஹரியானா, மகாராஷ்டிரா, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் சட்டசபையை முடக்கி வைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை நீடிப்பது ஏன்?.
ஜூலை 17ம் தேதியுடன் முடிவடைந்த ஜனாதிபதி ஆட்சியை மீண்டும் நீடித்துள்ளது மத்திய அரசு. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
சட்டவிரோதமாக சட்டசபையை கடந்த எட்டு மாதங்களாக முடக்கி வைத்துள்ளனர். இதற்கு எந்தக் காரணத்தையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
மழைக் காலத்திற்குப் பின்னால் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்குத் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சியை டிசம்பர் மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர் என்று கூறியிருந்தார்.
ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த சிபு சோரன் சட்டசபை இடைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சட்டசபை முடக்கப்பட்டது, ஜார்க்கண்ட்டில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக்கப்பட்டது. எந்தக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் மெஜாரிட்டி இல்லாததால் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications