நேபாளம் வழியாக உளவு பார்க்கும் சீனா: 'ரா'
டெல்லி: சீனா, நேபாளத்தில் இருக்கும் தங்களது கல்வி மையங்கள் மூலம் இந்திய பகுதிகளை உளவு பார்ப்பதாக 'ரா' உளவு அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சீன ராணுவத்தின் ஊடுருவல், சீன விமானம் பறந்தது என தொடர்ந்து சீன விவகாரங்கள் செய்திகளை ஆக்ரமித்து வருகின்றன.
தற்போது சீனர்கள், இந்திய-நேபாள எல்லை பகுதி வழியாக உளவு பார்ப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இந்திய, நேபாள எல்லையில் பயிற்சி மையங்கள் என்ற போர்வையில் சீனாவின் உளவு அமைப்பினர் வேவு பார்த்து வருகின்றனர். இந்த மையங்கள் தற்போது காளான்களை போல் திடீரென்று அதிகம் முளைத்துள்ளன. இது குறித்து 'ரா' அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்பகுதியில் இது போல் சுமார் 24 பயிற்சி மையங்களை சீனா திறந்துள்ளதாக 'ரா' கூறுகிறது. மேலும் நேபாளத்தில் இருக்கும் 30 சீன நிறுவனங்களும் உளவு வேலையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
கட்டுமான பணிகள், தொலை தொடர்பு பணிகளை செய்து வரும் இந்த நிறுவனங்களின் தலைவர்களாக முன்னாள் சீன ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 'ரா' அமைப்பு இது தொடர்பாக தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறது. இந்த பிரச்சனை குறித்து நேபாள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
நேபாளத்தில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க சீனா கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கு ராணுவம், நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நேபாளம், இந்தியாவை சார்ந்து இருப்பதற்கு பதிலாக சீனாவை சார்ந்திருக்க வேண்டும் என்பதில் சீனர்கள் உறுதியாக உள்ளனர். இதன் காரணமாக தான் ரூ. 500 கோடி செலவில் நேபாள தலைநகர் காத்மண்டுக்கும், திபெத்தின் லாசாவுக்கும் இடையே பெரிய சாலை அமைத்து வருகிறது.
மேலும், கடந்த 2008 செப்டம்பரில் சீனா ரூ. 6.5 கோடி அளவுக்கு ராணுவ உதவிகள் செய்தது. மேலும் ரூ. 13 கோடி அளிப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளது.