கர்நாடகம், ஆந்திராவில் பெரும் மழை- 36 பேர் பலி
பெங்களூர்: கர்நாடகம் ம்றும் ஆந்திராவில் பெய்து வரும் கன மழைக்கு 36 பேர் பலியாகியுள்ளனர்.
வடக்கு கர்நாடக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெரும் மழை பெய்து வருகிறது. அதேபோல ஆந்திராவிலும் பல பகுதிகளில் கன மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழ்பட்டுள்ளன. போக்குவரத்து, தகவல் தொடர்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பீஜப்பூர் மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு மட்டும் 17 பேர் மழைக்குப் பலியாகியுள்ளனர்.
பெல்காம், கொப்பால், பெல்லாரி, ரெய்ச்சூர், பாகல்கோட், பீதர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
தலைநகர் பெங்களூரிலும் நேற்று மாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலைமை வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் ...
ஆந்திர மாநிலத்தில் புதன்கிழமை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மகபூப் நகர், கர்னூல் மாவட்டங்களில் பல கிராமங்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்துள்ளன. குளங்கள் நிரம்பி வழிகின்றன. மகபூப் நகர் மாவட்டத்தில் 10 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.
ஜட்சர்லா அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கி 2 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
அதே மாவட்டத்தில் இரு சம்பவங்களில் 3 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். மின்னல் தாக்கி ஒருவர் கரீம்நகர் மாவட்டத்தில் இறந்தார்.
மகபூப் நகர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய ஐந்து மாணவர்களை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.
மகபூப் நகர் மாவட்டத்தில் 3 கிராமங்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளன. அங்கு சிக்கியிருப்பவர்களை மீட்கும் முயற்சிகள் முடுக்கி
விடப்பட்டுள்ளன.
கர்னூல் மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தங்க 21 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திரும்பி வந்த அந்தமான் விமானம்:
இந் நிலையில் சென்னையில் இருந்து இன்று அதிகாலை 5.55 மணிக்கு ஏர் இந்தியா விமானம் அந்தமான் புறப்பட்டு சென்றது. போர்ட் பிளேர் விமான நிலையத்தை நெருங்கிய போது கடும் மேகமூட்டத்துடன் பலத்த மழை பெய்தது.
இதையடுத்து விமானம் தரையிறங்க இயலவில்லை. சுமார் 1 மணி நேரம் வானில் வட்ட மிட்ட பிறகு விமானம் சென்னைக்கே திரும்பி 11 மணிக்கு தரை இறங்கியது.
விமானத்தில் இருந்த 142 பயணிகளும் சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீண்டும் நாளை காலை இந்த விமானம் அந்தமான் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.