போபர்ஸ்: எத்தனை நாட்களுக்கு இழுத்து போவது- ப.சி
டெல்லி: போபர்ஸ் வழக்கில் குவாத்ரோச்சியை நாம் விசாரிக்கத் தவறி விட்டோம். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வரவும் முடியவில்லை. இதனால்தான் இந்த வழக்கை மூட சட்ட அமைச்சகம் தீர்மானித்துள்ளது. இப்படியே எத்தனை நாட்களுக்கு இழுத்துக் கொண்டு போவது?. எனவே இது சரியான முடிவுதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை இழுத்து மூட மத்திய அரசு முடிவு செய்து விட்டது. இதனால் ரூ. 64 கோடி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இத்தாலி தொழிலதிபர் குவாத்ரோச்சி சுதந்திர மனிதராகிறார்.
இதுகுறித்து நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில்,
சட்ட அமைச்சகம் எடுத்துள்ள முடிவை நான் ஒப்புக் கொள்கிறேன்.
இந்த வழக்கை நான் இதுவரை கையாண்டதில்லை. எனவே அதன் உண்மை விவரங்கள் எனக்குத் தெரியாது. அதேசமயம், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியிருப்பதை மட்டுமே நான் அறிவேன். அதில் அர்த்தம் உள்ளது.
சட்ட அமைச்சர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், நமது நாட்டுச் சட்டப்படி குவாத்ரோச்சியை நாடு கடத்திக் கொண்டு வரவும், விசாரணை நடத்தவும் முயன்றோம். அதில் தவறி விட்டோம். இந்த நிலையில் இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இழுத்துக் கொண்டு போவது?
எனவேதான், அட்டர்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோரின் ஆலோசனை பெறப்பட்டது. அந்த ஆலோசனையின் பேரில், எந்தவிதமான உறுதியான ஆதாரமும் இல்லாததால், இந்த வழக்கை கைவிட முடிவு செய்யப்பட்டதாக சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் இது சரியானதே என்று நான் கருதுகிறேன் என்றார் சிதம்பரம்.
தாவூத் வழக்கையும் கைவிடுமா அரசு?
அப்போது நிருபர்கள், அப்படியானால், பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாததால், அவர் மீதான வழக்குகளும் கைவிடப்படுமா என்று கேட்டபோது, நிச்சயமாக இல்லை. தாவூத்தை நாம் இன்னும் கோர்ட்டுக்குக் கொண்டு வந்து நிறுத்தவில்லை.
மேலும், தாவூத்துக்கு எதிராக மத்திய அரசிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. எனவே தாவூத் இப்ராகிம் மீதான வழக்குகள் கைவிடப்பட மாட்டாது என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications